#

#

#

#

#

#

#

#

#

#

Saturday, January 02, 2016

பழைய சோற்றின் மகத்துவம்

கேஸ் அடுப்பும், குக்கர் சோறும் வந்த பின்னர், பழைய சோறு சாப்பிடுவதே நமக்கு மறந்து விட்டது. குழந்தைகளுக்கு பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகி விட்டனர். ஆனால், பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சென்று அங்கு குடியேறிய நம்மவர்கள் சிலர், தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகளைக் குறித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது. அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆராய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது. உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ்’ பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை அணுகாது.
காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை உண்பதால், உடல் லேசாகவும், அதேசமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதில் உருவாகின்றன. மறுநாள் இதை குடிக்கும்போது, உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. இப்போதைய நிலையில், பிரவுன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி மூடி வைத்துவிட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்துக் குடித்தால் போதும். ஆராய்ச்சியில் கூறிய பலன்களை அனுபவிக்க முடியும்.