#

#

#

#

#

#

#

#

#

#

Sunday, November 30, 2014

பத்மஸ்ரீ விருது பெற்ற நம்ம ஊரு விவாசயி


புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீவிருது டெல்லியில் வழங்கப்பட்டது.


தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார்.
மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. இப்படிபட்டவர் பத்மஸ்ரீவிருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை.

ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம்முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர். பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை.

‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ்சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள்.நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய எந்த வாரஇதழும் இச்செய்தியை வெளியிடவில்லை ..

ஒருவேளை தொப்புளைவிட விவசாயம் தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம். இதுவே ஒரு சினிமா நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்றால் எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர கட்டவுட்டுகள் , வெடி என ஊரையே அமர்க்களப்படுத்தி இருப்பார்கள் ...

மகேந்திரன்.பா

திரை விமர்சனம்: காவியத்தலைவன்

சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார்.
சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாக நினைத்து பொறாமை கொள்கிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தை ராஜாபார்ட்டாக உயர்த்துகிறார் நாசர். இதனால் ப்ரித்விராஜின் பொறாமை அதிகரிக்கிறது. ஜமீன்தாரின் மகளைக் காதலிப்பதால் கெட்ட பெயர் எடுக்கும் சித்தார்த்தை நாசர் தண்டிக்கிறார். நாசரின் மறைவுக்குப் பிறகு ப்ரித்விராஜ் சித்தார்த்தை விரட்டி அடிக்கிறார்.
சித்தார்த் வெளியேற்றப்பட்ட பிறகு ப்ரித்வியால் தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிந்ததா? வெளியேற்றப்பட்ட சித்தார்த் என்ன ஆனார்? இருவரும் மீண்டும் சந்தித்தார்களா? வேதிகா யாரைக் காதலிக்கிறார்? இருவரில் யார் காவியத் தலைவன் என்பதுதான் மீதிக்கதை.
கதை புதிதல்ல, சொல்லப்போனால் பல காட்சிகளைப் பார்க்கும்போதே அடுத்த காட்சியை சட்டென்று ஊகித்துவிடலாம். இதே கதை, திரைக்கதையை பல தமிழ்ப் படங்களில் பார்த்தாகிவிட்டது. ஆனால் இயக்குநர் வசந்த பாலன் பி.யு.சின்னப்பா காலத்து நாடக உலகைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவந்ததற்கு பாராட்டுக்கள். இதுபோன்ற மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் படத்தை பார்க்கும்போது அதிகமாக ஏற்படுகிறது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு மனம்திறந்து பாராட்டலாம்.
சித்தார்த்தின் கதாபாத்திரத்தில் இருக்கும் கலை நுட்பம், ரசிப்புத்தன்மை, விடுதலை வேட்கை, குற்றவுணர்ச்சியால் துடிதுடிக்கும் நேர்மை எனப் பல பரிமாணங்களை இயக்குநர் செறிவாகச் செதுக்கியுள்ளார். ஆனால் பின் பாதியில் சித்தார்த் தியாகியாக உருவெடுப்பது டூமச்சாகத் தோன்றுகிறது.
நாடகக் கலையில் பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு தன் வாழ்வை அர்ப்பணிக்கும் கோமதி நாயகமாக மிரட்டுகிறார் ப்ரித்விராஜ். ஒவ்வொருமுறையும் நடிப்பில் தன்னை சித்தார்த் மிஞ்சும்போதும் எழும் பொறாமை, வெறுப்பு ஆகியவற்றை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஸ்த்ரீ பார்ட், ராஜபார்ட், கர்ணன் வேடங்களில் நடிக்கும்போது அவரது தமிழும் நடிப்பும் நெருடுகிறது. தன் கலை வாழ்விலும், காதல் வாழ்விலும் சித்தார்த் முன்னால் தோற்றுப்போய் ஏதுமில்லாதவனாக ப்ரித்விராஜ் நிற்பதை ஆழமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
நளினமான நடன அசைவுகள், அழகிய முகபாவங்களில் தானும் நடிப்பில் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வேதிகா. “நான் இன்னைக்கு நல்லா நடிச்சேனா?” என அவர் சித்தார்த்திடம் கேட்கும் காட்சி ரசிக்கவைக்கிறது.
அரக்கன் சூரபத்மனாக ப்ரித்விராஜ் ஆக்ரோஷத்தோடு சற்று மிகையான நடிப்பை வெளிப்படுத்தும்போது அதே கதாபாத் திரத்தை அலட்டிக்கொள்ளாமல் அனாயாசமாகக் சித்தார்த் நடித்துக் காட்டும் காட்சி அருமை.
அதைத் தொடர்ந்து நாசரிடம் ப்ரித்விராஜ் விவாதிக்கும் காட்சியில் அவர்களுடன் ஜெயமோகன், வசந்த பாலன் ஆகியோரும் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள்.
அன்றைய நாடக அரங்க அமைப்பு முறை காலகட்டத்தைக் கொண்டுவரும் இயக்குநர், புராண நாடகக் காட்சிகளில் நடிகர்களின் அந்தகால நடிகர்களின் நடிப்பு முறைகளை இன்றைய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறிவிடுகிறார். தனக்குக் கிடைத்த பின்புலத்தை அவர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இரட்டை நாயனம் போல வசந்த பாலனும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவருக்கு ஒருவர் இசைந்து கொடுத்து கதையை சித்தரிக்கிறார்கள். ஆனால் மேடை நாடகத்துக்கு முதன்மையான ஆர்மோனியம் அதிகம் கண்ணுக்கும், காதுக்கும் புலப்படவில்லை என்ற விமர்சனமும் எழுகிறது.
சுதந்திரப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த கால கட்டத்தில், நாடகத் தையே வாழ்க்கையாகக் கொண்ட கதாபாத்திரங்களைப் பின்தொடரும் ஒரு திரைப்படத்தில் அவர்களது நிஜமான வாழ்வியல் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதிலும் காதல் காட்சிகள் அந்தக் காலக்கட்டத்தோடு பொருந்தாமல் செயற்கையாக எரிச்சலூட்டுகிறது.
ஒரு நாடக நடிகருக்கு அசலான துப்பாக்கி எப்படி அவ்வளவு சுலபமாகக் கிடைத்தது என்பதற்குக் காட்சிகள் நியாயம் சேர்க்கவில்லை.
அதேசமயம், மென்மையாக படம் முழுக்க வின்டேஜ் உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.
திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது.

கர்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல்ல‍து கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும் கிருமிகளும் பாக்டீரியாக்க‌ளும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கர்பிணிகள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Eating certain foods during fetal development in pregnant women
மீன்கள்: ஆற்று மீன்களையோ குளத்து மீன்களையோ அல்ல‍து ஐஸ் வைத்த‍ பதப்படுத்த‍ப்பட்ட‍ மீன்களையோ சாப்பிடக்கூடாது. கர்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கர்பநேரத்தில் அவர்களது உடலில் இருக்க வேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.

அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்க‍ப்பட்ட‍ உணவுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்ப‍தால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப்படுவதால், கருச்சிதை வும் ஏற்படும் அபாயம் உண்டு.

துரித உணவு மற்றும் பதப்படுத்த‍ப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்க‍ப்படும் உணவு வகைகளையும் பதப்படுத்த‍ப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்க‍ப்பட்டுள்ள‍ பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ப‌ழங்கள்

அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய இரண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள‍ வெப்ப‍த்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணாமாகி விடும்.

காய்கறிகள்

சுத்தம் செய்ய‍ப்பட்ட‍ காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவியபின் சமையலுக்கு பயன்படுத்த‍லம்) சமைத்து உண்ண‍ வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும்.

பதப்படுத்த‍ப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்க‍கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: திருவள்ளுவர்- திருக்குறள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் பொதுத் தமிழ் பகுதியில் பகுதி ஆ.1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரைநிரப்புதல் பகுதியில் அன்பு, பண்பு, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல். போன்ற 19 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.
அவைகள் பற்றி தமிழ் அறிஞர்கள் அறிவோம் பகுதியில் தந்துள்ளோம் படித்து பயன்பெறுங்கள். திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம்.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
இவரது ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது இறுதி.
திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எ.கா: 2014 +31 = 2045 (கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045 என்று கூறுவோம்)
* திரு+குறள்= திருக்குறள்
* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)
* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
* திருக்குறளில் 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
* திருக்குறள் மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
* திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.
* திருக்குள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
* திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
* திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
* உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்.
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
* திருக்குறள் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
* 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறதி' இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
* மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
* '"தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ" (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
* திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்- பரிமேலழகர்
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
* எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
* ெே என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.
* சிறப்புப்பெயர்கள்: வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்.
* திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
* திருக்குறள்  இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
* திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
* திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர். மேலும் மு.வரததாசனார், மணக்குடவர் என பலர் எழுதியுள்னர்.
* விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
* திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர் தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.
* திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்.
* அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.
* "ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன.

* அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
* பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் (112) - என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ளன.

* "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" - என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.

* ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
* "துணை எழுத்தே இல்லாத குறள்
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (391)

* திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.
* முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின் முதற்பதிப்பாகும்.
* திருக்குறளில் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ள எழுத்துகள் '"வீ, ங".
* 1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.
* திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

சிந்தித்து செயல்படு விழிபுணர்வு - குறும்படம்



தண்ணீரை சிக்கனாமாக பயன்படுத்துவோம்

Saturday, November 29, 2014

சிகிச்சை பலனின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தார்!



சிட்னி: தலையில் பந்து பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ்(25) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். எதிர்பாராதவிதமாக தலையில் பந்து தாக்கியதில் சுயநினைவினை இழந்த ஹியூக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியானது, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பவுன்சராக வந்த பந்து எதிர்பாராத விதமாக தலையில் பலமாக தாக்கியது.  

இதனையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஹியூக்ஸின் நிலைகவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பொழுது அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது, இதுகுறித்த தகவல்கள்  48 மணி நேரத்திற்குள் தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 63 ரன்கள் எடுத்திருந்த போது, ஷேன் அபாட்டின் வீசிய பந்தானது ஹெல்மெட் அணிந்திருந்த ஹியூக்ஸின் இடது தலையில் பட்டு தாக்கியவுடனேயே ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது.
பதறிப்போன மற்ற வீரர்களும், மருத்துவ உதவியாளர்களும் முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 28, 2014

எப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆயிடுச்சே..!


சென்னைஎப்படி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்படி ஆகிவிட்டது.. என்று புலம்பும் நிலையை உருவாக்கிவிட்டனரே என்ற ஆதங்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மொத்தம் 8 அணிகள் அப்போது களம் கண்டன. 'ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர்' என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர்தான் மகேந்திரசிங் டோணி. சென்னை அணியின் கேப்டனாக அப்போது முதல் டோணிதான் சென்னையின் கேப்டனாக தொடருகிறார்.

வங்கித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்குத் தயாராவது குறித்து யோசனைகள்…

பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் பணிகளில் சேருவதற்கான எழுத்துத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம், வங்கி சம்பந்தப்பட்ட பொது அறிவு, கம்ப்யூட்டர் அறிவு ஆகிய பகுதிகள் உள்ளன. இதுபற்றிய விவரங்களைத் தனித்தனியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொதுவான சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்...


பாரத ஸ்டேட் வங்கியில் 6,425 பேருக்கு கிளார்க் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளில் கிளார்க் வேலையில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பொதுத் துறை  வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளில் கிளார்க் (அசிஸ்டெண்ட்) பணியில் 6,425 பேரை  சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் 725 இடங்களும், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலாவில் 1,200 இடங்களும், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூரில் 1,300 இடங்களும், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூரில்...

பிஎச்.டி. படிப்பு: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழு நேரம் மற்றும் பகுதி நேர பி.எச்டி. படிப்புகளை வழங்கி வருகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, வணிகவியல், கல்வியியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிக்கலாம்.

2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Wednesday, November 26, 2014

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்