#

#

#

#

#

#

#

#

#

#

Saturday, August 27, 2016

வருமுன் காப்போம்! - சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தல்

வருமுன் காப்போம்!  

சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தல்

 சென்னையில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு. இன்னும் இரண்டே மாதங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின் பாதிப்பை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. ஏரிகள் ஆக்கிரமிப்புதான் பெரும் பாதிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதில் சீமைக் கருவேல மரங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சென்னையின் பெரும்பாலான ஏரிகள், கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகளின் வடிநிலங்கள், வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாய்கள், ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வேளச்சேரி கால்வாய், வீராங்கல் ஓடை உள்ளிட்ட சென்னையின் வெள்ளத் தணிப்புக் கால்வாய்களின் கணிசமான பகுதிகளை சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன.
தமிழகத்தில் வேலிக்காகவும் எரிபொருள் தேவைக்காகவும் 1950-களில் அறிமுகமாகின, ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சீமைக் கருவேல மரங்கள். விரைவாக விதைப்பரவல் செய்யும் இவை, இன்றைக்குத் தமிழகத்தின் 25% விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. 13 மாவட்டங்களில் 2.10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இம்மரங்களின் பிடியில் சிக்கியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ‘நச்சு மரங்கள்’ பட்டியலில் இருக்கும் இந்த மரம், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கான திட்டம் மற்றும் வழிமுறைகள் அடங்கிய அறிக்கையை 2016 ஜனவரியில் அளிக்க வேண்டும் என்று கடந்த 2015 அக்டோபரில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து வனத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறைச் செயலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அதன் பின்பு இந்தக் குழு என்ன ஆனது என்று தெரியவில்லை. இதற்கிடையே பொதுப்பணித் துறை கருவேல மரங்களை அழிக்க ரூ.809 கோடி தேவை என்று தெரிவித்தது.
கடந்த 2011-ல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது சீமைக் கருவேல மரங்களை அழிப்பது குறித்து நிறைய பேசினார். எனினும், காரியங்கள் நடக்கவில்லை. இப்போது அவற்றை அழிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இனிமேலாவது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அரசு உணர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.
இந்தத் திட்டம் வேகமாகச் செயல்படுத்தப்படாததற்கு அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்படும் ஒரு விஷயம், நிதிப் பற்றாக்குறை. உதாரணத்துக்கு, 2.10 லட்சம் ஹெக்டேர் கருவேல மரங்களை அழிக்க பொதுப்பணித் துறை நிர்ணயித்த செலவு ரூ.809 கோடி. ஆனால், ஒதுக்கீடே செய்யப்படவில்லை. இதனிடையே, அவ்வளவு செலவு தேவையில்லை என்று இன்னொரு யோசனை சொல்கிறார்கள் இந்த மரங்களை அழிப்பதில் ஈடுபட்டுவரும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். மக்கள் குழுக்களோடு இணைந்து அரசே கூட்டு வேலையில் ஈடுபடுவதே அது.
அரசு நினைத்தால் சீமைக் கருவேல மரங்களை அழிப்பது சாத்தியம்தான். ஆனால், அரசால் மட்டுமே சாத்தியமாகாது. ஏற்கெனவே, இதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், இளைஞர்கள், என அனைத்துத் தரப்பையும் ஒருங்கிணைத்து விரிவான செயல்திட்டத்தை மனச் சுத்தியுடன் உருவாக்க வேண்டும். அப்போதுதான் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் இருக்கும் சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற முடியும். அதற்கு இதுதான் சரியான தருணமும்கூட! 

 நன்றி: தி இந்து தமிழ்
தேதி: 27-08-2016
மேலும் தகவல்களுக்கு:

சீமை கருவேலமரம் - தீமைகள் ( Juliflora Disadvantages )







சீமை கருவேலமரம் - தீமைகள் ( Juliflora Disadvantages )பற்றிய வீடியோ தொகுப்பு

நன்றி: http://aaproject.org/

Friday, August 19, 2016

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இயன்ற வரை போராடிய பி.வி.சிந்து வெள்ளி வென்று சரித்திர சாதனை

ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார்.

வெள்ளிப்பதக்கத்தை முத்தமிடும் பி.வி.சிந்து. 

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மாரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய பி.வி.சிந்து வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் வெள்ளி வென்று சரித்திர சாதனை படைத்தார்.

ரியோ ஓலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மாரின் 3 செட்கள் ஆட்டத்தில் 2-1 என்று வென்று தங்கம் வெல்ல, இயன்ற வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்.
முதல் முறையாக ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தினார் பி.வி.சிந்து.

பரபரப்பான இறுதிப் போட்டியில் முதல் செட்டை அபாரமாக ஆடி 21-19 என்று வெற்றி பெற்ற சிந்து, இரண்டாவது செட்டில் 12-21 என்று தோல்வி அடைந்தார், 3-வது செட்டில் சற்றும் மனம் தளராது ஆடிய பி.வி. சிந்து கடைசியில் போராடி 15-21 என்று தோல்வி தழுவினார்..

உலகத் தரவரிசை நம்பர் 1 ஸ்பெயின் வீராங்கனை கடைசியில் 19-21, 21-12, 21-15 என்ற செட்களில் வெற்றி பெற்று தங்கம் வென்றார், பி.வி.சிந்து தனது அறிமுகப் ஒலிம்பிக் போட்டியிலேயே இந்தியாவுக்காக பாட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் முதல்முறையாக வென்று சரித்திரம் படைத்தார்.

அறிமுக ஒலிம்பிக் தொடரில் சிந்து வெளிப்படுத்திய ஆட்டத்திறன், மனோவலிமை அசாதாரணமானது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
முதல் செட்டில் 5 புள்ளிகளைத் தொடர்ந்து பெற்று வென்ற சிந்து:

முதல் செட்டில் தொடக்கத்தில் சிந்து அடித்த ஷாட்களை அபாரமாகக் கணித்து ஆடாமல் விட்டே அவுட் செய்த கரோலினா மரின் 5-2 என்று முன்னிலை பெற்றார். முதலில் வலைக்கருகில் சிந்துவை சில மென்மையான டேப்கள் மூலம் முன்னுக்கு இழுத்த மரின் பிறகு சக்தி வாய்ந்த ஷாட்களை சிந்து தொட முடியாது அடித்து புள்ளிகளை அள்ளினார். இதனால் 10-6 என்று மாரின் முன்னிலை பெற்றார்.

பிறகு சிந்து ஒரு ஸ்மாஷ் ஒரு லாப் மூலம் இரண்டு புள்ளிகளை பெற மாரின் ஒரு தவறிழைக்க 9-13 என்று நெருங்கினார் சிந்து. கடைசியில் சிந்து மாரினை சில தவறுகளை இழைக்கச் செய்து அவரை முன்னுக்குப் பின்னும் அலைக்கழித்து 14-16 என்று நெருங்கினார். கடைசியில் ஒரு 49 ஷாட் ராலியில் மரின் கடைசியில் லாங்கில் அடித்து தவறிழைத்தார் 17-16 என்று நெருங்கியது.

கடைசியில் இரண்டு அபாரமான ஷாட்கள் மூலம் 19-16 என்று மாரின் முன்னிலை பெற்றார். சரி வெற்றி பெற தேவை 2 புள்ளிகள் என்ற நிலையில் பி.வி.சிந்து தற்போது மாரினை சில சிக்கல்களுக்குள்ளாக்கினார், தனது கடினமான கோணங்களினால் மாரின் தொடர்ச்சியாக 3 ஷாட்களை வெளியே அடித்தார், ஒரு நெஞ்சுயர பந்தை நெட்டில் தட்ட சிந்து 20-19 என்று முன்னேறினார், கடைசியில் சிந்து ஒரு ஷாட்டை மாரினின் உடலுக்கு அடிக்க எடுக்கத் திணறி முதல் செட்டை இழந்தார் மாரின் சிந்து 21-19 என்று வென்றார்.

2-வது செட்டில் மாரின் ஆதிக்கம்:

2-வது செட்டில் தனது சப்தத்தையும் ஆக்ரோஷத்தையும் கூட்டிய மாரின் சில ஷாட்கள் மூலம் தொடக்கத்திலேயே 3-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு மாரின் விடாமல் சில அபாரமான முன் கை வாகான ஸ்லைஸ், பந்தை கீழே அடிப்பது, சிந்துவின் ராக்கெட் தொட முடியாது தள்ளி அடிப்பது என்று ஆதிக்கம் செலுத்தி 6-2 என்று முன்னிலை பெற்றார். இதன் பிறகு தொடர்ச்சியான ஆதிக்கத்தில் மாரின் சிந்துவின் மனோபலத்தை குலைக்குமாறு ஆடினார், இடது கை வீரர் என்பதால் ஷாட்கள் எந்தப்புறம் அடிப்பார் என்பதை கணிக்க முடியவில்லை, அவர் ரிடர்னிலும் பெடரர் போல் முதுகைக் காட்டிக் கொண்டெல்லாம் எடுத்து 11-2 என்று முன்னிலை பெற்றார். கடைசியில் 8 புள்ளிகள் இடைவெளி இருவருக்கும் வர 21-12 என்றி மாரின் வென்றார்.

உயிரைக்கொடுத்து போராடிய இறுதி செட்:

3-வது இறுதி செட் பரபரப்பான எதிர்பார்ப்புடன் தொடங்கியது. மாரின் சர்வில் வென்றார், பிறகு சிந்து ஒரு புள்ளி வென்றார், அடுத்ததாக தலைக்கு மேல் வந்த பந்தை தனது வலுவான ஸ்மாஷ் ஷாட்டை ஆடினார் சிந்து ஆனால் பந்து வலையைத் தாக்க மாரின் 3-1 என்று முன்னிலை பெற்றார்.

அதன் பிறகு மாரின் தனது ஆட்டப்பாணியையே மாற்றி ரிஸ்டி ஷாட்களை ஆடி 5-1 என்று முன்னிலை பெற்றார். அடுத்ததாக மாரின் ஒரு கிராஸ் கோர்ட் ஷாட்டை வெளியில் அடிக்கவும் சிந்து ஒரு ஸ்மாஷை தாக்கவும் 3-6 என்று நெருங்கினார் சிந்து. இந்நிலையில் சிந்துவின் பேக்ஹேண்டுக்கு பந்தை அடித்து 9 புள்ளிகளுக்குச் சென்றார் மாரின், ஆனால் சிந்துவும் விடவில்லை ஒரு ஸ்மாஷ் மூலம் 5-9 என்று நெருங்கினார். இத்துடன் 4 தொடர் புள்ளிகளை வென்ற சிந்து 8-9 என்று நெருக்கினார். இந்நிலையில் சிந்து அடித்த ஷாட் ஒன்றை அருமையாகக் கணித்த மாரின் விட்டார் அவுட் ஆனது 10-8 என்று மாரின் முன்னிலை பெற்றார்

இப்போது மாரினின் உடலுக்கு நேராக ஒரு ஷாட்டை அற்புதமாக சிந்து அடித்து பிறகு ஒரு நீண்ட ராலியில் சிந்து வென்று 10-10 என்று ஆட்டம் சூடுபிடித்தது. அதாவது முனைகள் மாறும்போது மாரின் 11-10 என்று முன்னிலை வகித்திருந்தார். இந்நிலையில் சிந்து அறியாமல் சில பிழைகளைச் செய்தார், சில ஷாட்களை சோதனையாக முயற்சி செய்தார் இதனால் மாரின் 13-10 என்று முன்னிலை பெற்றார். அடுத்தடுத்து ஸ்மாஷ்கள் மூலம் மாரின் 15-11. கடைசியில் சிந்து 2 புள்ளிக்ளை பெற மாரின் ஒரு புள்ளியை பெற 16-13 என்று திரில்லிங் முடிவுக்குச் சென்றது. ஆனால் சிந்து மேலும் சில தவறுகளைச் செய்தார், மாரினின் ஸ்மாஷ்கள், இடது கை லாப்கள், ஸ்லைஸ்கள் சிந்துவுக்கு குழப்பம் விளைவிக்க உடல் மொழி தளர்ந்தது கடைசியில் 21-15 என்று மாரின் தங்கம் வென்றார். 

Courtesy: The Tamil Hindu