#

#

#

#

#

#

#

#

#

#

Wednesday, December 24, 2014

ஸ்ரீநிவாச ராமானுஜன் 10



குறுகிய காலத்தில் பல கணித உண்மைகளைக் கண்டறிந்த கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 ஸ்ரீநிவாச ராமானுஜன்  ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் படித்தார். பள்ளியில் படிக்கும்போதே கல்லூரி மாணவர்களுக்கான எஸ்.எல்.லோனியின் முக்கோணவியல் மற்றும் அடிப்படை கணித சூத்திரங்களைத் தொகுத்து வழங்கிய ஜி.எஸ்.கார் என்பவரின் புத்தகத்தை படித்து முடித்தவர்.
 சிக்கலான கணித உண்மைகளை மற்றவர் உதவியின்றி தானே புரிந்துகொண்டார். கணக்கில் இருந்த அதிக ஆர்வத்தால், ஆங்கிலப் பாடத்தில் 2, 3 முறை தோல்வி அடைந்தார். அதற்குள் திருமணமும் ஆனது.
 மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார். பணக்காரர்களிடம் தன் கணித நோட்டுப் புத்தகங்களைக் காட்டி உதவி கேட்டார்.
 1912-ல் சென்னை துறைமுகத்தில் ரூ.25 சம்பளத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. அங்கு அதிகாரிகளாக இருந்த நாராயண ஐயர், சர்.பிரான்சிஸ் இவரது திறமையைப் பார்த்து வியந்தனர். அலுவலகத்தில் வேலை பளுவைக் குறைத்து, கணித ஆராய்ச்சிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தனர். அப்போது, தான் கண்டறிந்த சில அரிய கணித மாதிரிகளை இங்கிலாந்து கணிதப் பேராசிரியர்களுக்கு அனுப்பினார்.
 இவற்றில் பல கடிதங்கள் குப்பைக் கூடைக்குப் போனது. பேராசிரியர் ஹார்டி மட்டும் இவரது திறமையைப் புரிந்துகொண்டார்.
 அவரது முயற்சியாலும் பலரது உதவியாலும் 1914-ல் இங்கிலாந்துக்கு புறப்பட்டார். கேம்ப்ரிட்ஜ் சென்றவுடன் ஹார்டியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
 டாக்டர் பட்டத்துக்கு இணையான டிரினிட்டி கல்லூரியின் பி.ஏ. பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1917-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உடல்நிலை சற்று தேறியதும், மீண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
 இந்தப் பிறவி மேதைக்கு 1918-ல் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் என்ற கவுரவம் கிடைத்தது. அதோடு, நல்ல சம்பளமும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் 1919-ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். படுக்கையில் கிடந்த நிலையிலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.
 1914 - 1918 இடையே 3 ஆயிரத்துக்கும் அதிகமான புது கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்; 27 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படைகள் இன்று இயற்பியல் முதல் மின்தொடர்பு பொறியியல் வரை பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 இவரது நோட்டுப் புத்தகங்கள், காகிதங்கள், எழுதிவைத்த குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிடுவதில் வாட்சன், ஆண்ட்ரூஸ், ப்ரூஸ் போன்ற கணித வல்லுநர்கள் பல ஆண்டுகாலம் செலவிட்டனர். குறுகிய காலத்தில் இவர் கண்டறிந்த கணித உண்மைகளை இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் உலகம் முழுவதும் பல கணித வல்லுநர்கள் திணறுகின்றனர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 33-வது வயதில் மறைந்தார்.

COURTESY: THE TAMIL HINDU

Thursday, December 18, 2014

அரசு பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை



சென்னை: தமிழகத்தில், அரசு பள்ளிகளை, ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது.
புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மனிதவள மேம்பாட்டு மையங்களின் ஆலோசனைகள் கோரப்பட்டன.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, 411 ஆய்வுகள் வந்தன; இதில், 211 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.
இதுகுறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர், அமுதவல்லி கூறுகையில், "தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளை அனுப்பிய, கல்வியாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் வகையில், தேசிய கருத்தரங்கு, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பின், அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.
நன்றி : தினமலர் (18-12-2014)

Wednesday, December 17, 2014

பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இந்தப்
படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது. 

 இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார். இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.) ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும். பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும். 


 பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது. இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Courtesy: http://alleducationnewsonline.blogspot.in



Sunday, December 14, 2014

2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ...

மிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
முதல்-அமைச்சர் ஆணையின்படி, ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து 2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு அதாவது 7.3.2015-க்குள் tnvelaivaaippu.gov.in ஆன்-லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொசுவத்தி, ஊதுவத்திகளில் கேன்சர் காரணிகள்: நிபுணர்கள் எச்சரிக்கை

பூட்டிய அறையில் ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும்.
கொசுவத்தி, ஊதுவத்திகளில் இருந்து வரும் புகையை நுகர்வதால் நுரையீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை கேன்சர் நோய் வரக்கூட வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார் புனேவின் செஸ்ட் ரிசேர்ச் பவுண்டேஷன் இயக்குநர் சால்வி.
தேசிய அளவிளான கருத்தரங்கு ஒன்றில் பேசிய சால்வி, "பூட்டிய அறையில் ஒரே ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில்: "பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் ஊதுவத்தியிலிருந்து வெளியேறும் புகையில் லெட், அயர்ன், மேன்கனீஸ் போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளன. இதேபோல், வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசுவத்தியில் பைரத்திரின் (pyrethrin) என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது. இவை நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
புகை குறைவாக வெளியிடும் கொசுவத்திகள் என விளம்பரப்படுத்தப்படும் பொருட்களில் நச்சுத்தன்மையின் அளவு சற்று குறைவாக இருக்கும். இருப்பினும் அத்தகைய பொருட்கள் வெளியிடும் கார்பன் மோனோ ஆக்ஸைடு அளவு அதிகமாகவே இருக்கும்.
லிகுவிடேட்டர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் மீதான ஆய்வுகள் இன்னும் நிறைவு பெறவில்லை. இருந்தாலும், அவையும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
புனேவை சுற்றியுள்ள 22 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், பல குடும்பத்தினர் கொசுவத்தி, ஊதுவத்தி பயன்பாட்டின்போது வீடுகளின் கதவு, ஜன்னல்களை மூடிவைப்பது தெரியவந்துள்ளது. இது, புகையால் அவர்களை அதிகமாக பாதிக்கிறது" என்றார்.
நோய்களிலிருந்து தற்காப்பு
கொசு கடிப்பதால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கொசுவலைகளை பயன்படுத்துவது மிகச்சிறந்த வழி என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நச்சுப் பொருட்கள் அடங்கிய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை பொது நலன் கருதி தடை விதிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

தமிழில்: பாரதி ஆனந்த்

நன்றி : தி இந்து, 14-12-2014

Saturday, December 13, 2014

இமெயிலின் 32-வது ஆண்டு.

இமெயிலின் 32-வது ஆண்டு.
32-வது ஆண்டைக் கடந்து செல்லும் இ.மெயிலைக் கண்டுபிடித்தபோது வி.ஏ. சிவாஅய்யாத்துரையின் வயது 14.தான். இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர்ஸ்,மெமோ, அட்டாச்மெண்ட், முகவரி புக் என்று அனத்து செயல்பாடுகளை எதிரொலிக்கும் மெயில் அமைப்புக்கான கணினி நிரலாக்கத்தை 1978-ஆம் ஆண்டு உருவாக்கினார். இப்போது உள்ள பல இமெயில் அமைப்பிகளில் இது போன்ற அம்சங்கள் அனைவருக்கும் பிரபலமான ஒன்றாகியுள்ளண.
ஆகஸ்ட் 30, 1982-ஆமாண்டு அமெரிக்க அரசாங்கம் அய்யாத்துரையின் இ.மெயில் கண்டுபிடிப்பை அங்கீகரித்து விருதுவழங்கி இமெயிலுக்காக முதல் அமெரிக்கப் பதிப்புரிமையை முறைப்படி அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் பதிப்புரிமையினால் மட்டுமே மென்பொருள் கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்க முடிந்தது.
ஆர்பாநெட், மிட் அல்லது மிலிடரி போன்ற பெரிய நிறுவனங்களைப் போல பெரிய ஆய்வுத்திட்டங்களை வைத்து இமெயில் உருவாக்கப் படவில்லை. இது போன்ற நிறுவனங்கள் எல்லாம் ‘முடியாது மிகவும் சிக்கல் ஆனது’ என்று நினைத்ததாக Huffington Post என்ற பத்திரிக்கை கூறியது.
மும்பையில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார் அய்யாத்துரை. அவருடைய 7-வது வயதில் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய 14-வது வயதில் நியூயார்க் யூனிவர்ர்ஸிடியில் கணினி நிரலாக்கம் படித்தபோது Courant Institute of Mathematical Sciences என்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முன்னதாக நியூ ஜெர்ஸியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஆய்வாளராக பணிபுரிந்தார்.
அய்யாத்துரையின் திறமை,, ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை கண்ட Laboratory Computer Network -இன் இயக்குனர் Dr.Leslie Nicolson கவனத்தை ஈர்த்தது. அவர் அய்யாத்துரைக்கு விடுத்த சவால்: பழைய முறையான பேப்பர் மூலம் அனுப்பப்படும் தகவல்களை மின்னணு வழியாக மாற்றி அனுப்பும் முறை.
50,000 வரிகளுக்கு மேற்பட்ட கணினி நிரலாக்கத்தைக் கொண்டு அனைத்து வசதிகளையும் கொண்ட இன்பாக்ஸ், அவுட் பாக்ஸ், ஃபொல்டர்ஸ், மெமோ, அட்டாச்மெண்ட்ச், முகவரி புக், பேப்பர் க்ளிப்ஸ் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் கொண்ட இமெயில் அனுப்பும் ஒரு மின்னணுக் கருவியை உருவாக்கினார்.

நன்றி : தி ஹிண்டு.

இணையத்தில் இருந்து ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்ய & நிலையினை தெரிந்து கொள்ள....

ஆதார் கார்டு இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய ....

ஆதார் கார்டு நிலையினை தெரிந்து கொள்ள.... 


லிங்கா - முதல் காட்சி முதல் 'பார்வை'

திரையில் சென்சார் போர்டு சர்டிஃபிகெட் வந்தபோது காதுகளை ஜவ்விடவைத்த விசில் சத்தம், 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற எழுத்துகள் தோன்றி மறைவது வரை நீடித்தது... அதான் ரஜினி!
ஆரம்ப காட்சிகளுக்குப் பின், "அவரோட பேரன் ஒருத்தர் இருக்கிறார். அவரை நாம தேடி கண்டுபிடிக்கணும். எங்கே இருக்கிறாரோ" என்று கே.விஸ்வநாத் சொன்னதுதான் தாமதம்... ஏ.ஆர்.ரஹ்மானின் ஆர்.ஆர்.-ஐ மிஞ்சிய ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே திரையில் தோன்றுகிறார் ரஜினி. 'இடையில் நிழல் வடிவில் கோச்சடையானில் கண்டாலும், நிஜத் தோற்றத்தில் ரஜினியைக் காண 4 வருடங்கள் காத்திருந்ததன் பலன் கிடைத்துவிட்டது' என்று அந்த ஆரவாரத்தை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
ஓபனிங் சாங். ரஜினியின் துடிப்பான அசைவுகளை அங்குலம் அங்குலமாக விசிலடித்து வியப்பை வெளிப்படுத்துகிறார்கள் ரசிகர்கள். திரையில் தோன்றிய முதல் காட்சியில் இருந்தே, இப்படத்தில் தனக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலை ரஜினி சமாளிக்கத் தொடங்கிவிட்டார் என்பது தெளிவானது. முகத்தில் ஒப்பனைகளால் முழுமையாக மறைக்க முடியாத முதுமை மீது ரசிகர்கள் கவனம் குவியக் கூடாது என்பதற்காக, உடல்மொழிகளில் வித்தியாசங்களைக் காட்டுகிறார். ரசிகர்களின் கவனம் தனது அசைவுகள், நடவடிக்கைகள் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் ரஜினி.
இந்தியா சுந்திரம் அடைவதற்கு முன்பு சோலையூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வறட்சியைப் போக்குவதற்காக, தனது சொந்த முயற்சியாலும், சொத்துகளாலும் மக்களை வைத்தே ஓர் அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன். அந்த அணையைக் கட்டுவதற்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள்... ஃப்ளாஷ்பேக்கில் வரும் இந்தக் கதைதான் படத்தின் மையமும் மேஜர் போர்ஷனுமாகும். அதே அணைக்கு தற்போது வரும் ஆபத்தும், அதைக் களைவதற்கு களமிறங்க வேண்டிய நிலைக்கு ஆளாகும் பேரன் லிங்கேஸ்வரனின் முயற்சியும்தான் எஞ்சிய திரைக்கதை.
சந்தானம், கருணாகரன் உள்ளிட்ட நண்பர்களுடன் ரஜினி அடிக்கும் 'லூட்'களும், இவர்களைச் சுற்றி வளைக்க வரும் அனுஷ்காவின் என்ட்ரிக்குப் பிறகு துவங்கும் லூட்டிகளும் ரசிகர்களை அவ்வப்போது கலகலப்பூட்டின. பல ஜோக்குகளுக்கு ரசிகர்கள் மவுனம் காத்தாலும், இடையிடையே ரஜினி உதிர்க்கும் தத்துவ பஞ்ச்-களால் அரங்கில் நான்கு புறமும் பறக்கிறது விசில்.
ஓடும் ரயிலில் அட்டகாச சண்டைக் காட்சிகளுடன் ஃப்ளாஷ்பேக் தொடங்கியபோது செம மிரட்டல். 'ரஜினிக்கு துணையாக கிராஃபிக்ஸ் இல்லை; கிராஃபிக்ஸுக்கு பக்க பலமாகவே ரஜினி' என்கிற ரீதியிலான அந்த ஸ்டைலிங் ஃபைட், ரஜினி ரசிகர்களுக்கு நிறைவான தீனி.
அதன்பின், இடைவேளை வரையில் மட்டுமின்றி, மிக நீண்ட ஃப்ளாஷ்பேக் முடியும் வரையில் திரையரங்கில் ரசிகர்களிடம் அமைதி நிலவியது, ‘நாம் ரஜினி படம்தான் பார்க்கிறோமா?’ என்கிற சந்தேகத்தை எழுப்பின. அதேவேளையில், ரஜினி பேசும் தத்துவ பஞ்ச்களும், வில்லன் கதாபாத்திரத்தை டீல் செய்யும் விதமும், மக்களிடம் பேசும்போது மிளிரும் உடல்மொழியும் அவ்வப்போது ரசிகர்களைத் தட்டி எழுப்பின.
அனுஷ்காவும் சோனாக்‌ஷியும் இப்படத்தில் ரஜினி பட நாயகிகளாகவே வருகின்றனர். துடிப்பில் அனுஷ்காவும், நடிப்பில் சோனாக்‌ஷியும் சிக்ஸர் விளாசினர். வழக்கம்போது ரசிகர்களின் கவனம் இவ்விருவர் மீதும் அல்லாமல் ரஜினி மீதே இருந்தது.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது. 1939-ல் நடக்கும் அணை கட்டும் காட்சிகளில் நூற்றுக்கணக்கானோரிடம் வேலை வாங்கியிருக்கிறார். பீரியட் ஃபீலுக்கு துணை செய்திருக்கிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. குறிப்பாக, அணையில் இருந்து முதன்முதலில் நீர் திறந்தோடும் காட்சியைக் காட்டிய விதமும், அப்போது உள்ளூர் இசை வாத்தியங்களால் ஒலித்த ரஹ்மானின் பின்னணி இசையும் பிரம்மிப்பூட்டும் அம்சங்கள்.
ஒரு வழியாக ஃப்ளாஷ்பேக் முடிந்து, நிகழ்காலத்துக்கு திரும்பியபோது லிங்கா விஸ்வரூபம் எடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் நிமிர்ந்து அமர்ந்தனர். அதற்கான ஸ்கோப் திரைக்கதையில் ஓரளவுதான் இருந்ததால், கதைக்கு கடமையாற்றும் வேலையை மட்டுமே ரஜினியால் செய்ய முடிந்தது. எனினும், பைக்கில் பறந்து, பின்னர் நடுவானில் சாகச சண்டை புரிந்தது, ரஜினி ரசிகர்களின் ஏக்கத்தை ஓரளவு பூர்த்தி செய்ததாகவே அமைந்தது.
ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் எடிட்டருக்கு நிறைய வேலை கொடுத்திருந்தால், ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினி படம் பார்த்திருக்கும் உணர்வு வந்திருக்குமோ எனத் தோன்றியது. பொதுவாக, ரஜினிக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமும், அதில் தனது ஸ்டைலான சதுரங்க வேட்டையால் ரசிகர்களை வசீகரிப்பதும்தான் ரஜினி படங்களில் டெம்ப் கூட்டும் அம்சம்.
அது, லிங்காவில் மிஸ்ஸாகி இருப்பது, தெரிந்தே செய்ததா அல்லது இயக்குநரின் தோல்வியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை உள்நோக்கம் இருக்கலாம் என்றும் நம்பத் தோன்றுகிறது. ரஜினி இனி துடிப்பையும் ஸ்டைலையும் சற்றே விலக்கி, எமோஷனல் பெர்ஃபார்மன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற முடிவுக்கான துவக்கம்தான் லிங்காவோ என்றும் யோசிக்கவைக்கிறது.
ஸ்டைலுக்கு இணையாகவும், சற்றே கூடுதலாகவும் எமோஷனல் காட்சிகளில் ரஜினி கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. அதேபோல், இளம் நாயகிகளுடான டூயட்களில் ஸ்டைலுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து, ரசிகர்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்வது, ரசிகர்கள் மீதான ரஜினியின் அக்கறையை வெளிப்படுத்தியது.
நாட்டுப்பற்று, சாதி எதிர்ப்பு, குழந்தைக் கல்வி முதலான விஷயங்களை ஒரு சில காட்சிகளாலும், வசனங்களாலும் நிரப்பி இருப்பதும் ரஜினி படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது.
சரி, அரசியல்...?
அது இல்லாமல் ரஜினி படமா? ஆங்காங்கே வசனங்கள் மூலம் அரசியல் அழைப்பு, அரசியல் பஞ்ச், அரசியல் நிலை(யில்லா)ப்பாடு முதலானவை திரையில் காட்டப்படும்போது, ரசிகர்கள் அடித்த விசில்களை எப்படி அர்த்தப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.
படத்தின் துவக்கத்தில், இப்படத்தின் கதை, மாந்தர்கள், சம்பவங்கள் எல்லாம் கற்பனையே என்று டிஸ்க்ளைமர் போட்டார்கள். ஆனால், தமிழ் சினிமா குறியீட்டு விமர்சகர்கள், லிங்கா படத்தை ஒட்டுமொத்தமாக அரசியல் படமாக கொத்து பரோட்டா போடவும் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஆம்... லிங்காவில், சுதந்திரத்துக்கு முன்பு அணை கட்டிய கதை - வரலாற்றையும், தற்போது அந்த அணைக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட ஆபத்தையும், பென்னி குயிக் - முல்லைப் பெரியாறு மற்றும் கேரள அரசுடன் ஒப்பிட்டு குறியீட்டு ரீதியில் விவாதத்தைத் துவக்கலாம் என்றே தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக, லிங்காவையும், தியேட்டரில் முதல் காட்சி பார்த்த ரசிகர்களையும் கவனித்துப் பார்த்தபோது மனதில் பட்டது ஒன்றுதான். ‘ரஜினியிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'ரஜினி' படத்தை மட்டும்தானோ?’ என்ற சந்தேகக் கேள்வியே அது.
என் அருகே ஒரு தீவிர ரசிகர்கள் குழு ஒன்று அமர்ந்து ரஜினியை ரசித்தது. படம் தொடங்கியபோது இருந்த உற்சாகம் அவர்களிடம் படம் முடிந்தபோது அவ்வளவாக இல்லை. தியேட்டரைவிட்டு நகரும்போது, அந்தக் குழுவில் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்...
'படம் எப்படிங்க?' என்றேன்
‘ம்... நல்லா இருக்கே’ என்று பூரிப்பை வரவழைத்துச் சொன்னார் அந்த ரஜினி ரசிகர்.
அதான் ரஜினி!

நன்றி : தி இந்து. 

Friday, December 12, 2014

MY BLOG SITE VIEWERS CROSSED 1000.

Thank you viewers....

Thursday, December 11, 2014

இன்று அன்று | 1901 டிசம்பர் 10: நோபல் பரிசுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன

ஸ்டாக்ஹோம் நகரில் 1833-ல் பிறந்தவர் ஆல்ஃபிரெட் நோபல். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது குடும்பம் ரஷ்யாவுக்குக் குடி பெயர்ந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை அவரது தந்தை நடத்தினார். ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் படிப்பைத் தொடர்ந்த நோபல், வேதியியலில் சிறந்து விளங்கினார். பின்னர், ஸ்வீடனுக்குத் திரும்பிய நோபல், வெடிமருந்து ஆராய்ச்சிக்காக ஒரு சோதனைக்கூடத்தை நிறுவினார்.
தனது ஆராய்ச்சியின் விளைவாக, நைட்ரோகிளிசரின் என்ற வேதிப் பொருளின் வெடிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தும் முறையைக் கண்டறிந்தார். மேம்படுத்தப்பட்ட வடிவிலான வெடிக்கச் செய்யும் கருவியையும் (டெட்டனேட்டர்) அவர் கண்டறிந்தார்.
1864-ல் அவரது தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அவரது தம்பி உட்பட பலர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, இன்னும் பாதுகாப்பான வெடி பொருளைத் தயாரிக்கும் பணியில் நோபல் தீவிரமாக இறங்கினார். அதன் பின்னர், அவர் கண்டுபிடித்ததுதான் ‘டைனமைட்’. தனது கண்டுபிடிப்புக் கான காப்புரிமை மூலம் ஏராளமான பணத்தைச் சம்பாதித்தார். சரி, வெடிமருந்து வியாபாரி எப்படி அமைதி விருதுக்கு அஸ்திவாரமிட்டார்? அதற்கான பின்னணி இதுதான்.
அவரது அண்ணன் லுட்விக் நோபல் 1888-ல் பிரான்ஸில் மரணமடைந்தார். ஆனால், ஆல்ஃபிரெட் நோபல் இறந்துவிட்டதாகக் கருதி, ஒரு பிரெஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டது. ‘மரண வியாபாரி மரணம்’ என்று அந்த நாளிதழ் வைத்த தலைப்பு அவரைக் கலங்கடித்தது. இதையடுத்து, “மனித குலத்துக்கு மிகப் பெரும் அளவில் பயனளிக்குமாறு செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும்” என்று தனது உயிலில் ஆல்ஃபிரெட் நோபல் குறிப்பிட்டார்.
டிசம்பர் 10, 1896-ல் அவர் மரணமடைந்தார். அவர் இறந்து 5 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் முதன்முதலில் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ல் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
- சரித்திரன்

Courtesy: The Tamil Hindu

நோபல் பரிசு 2014 - தயை குணத்தையும் அன்பையும் உலகமயமாக்குவோம்: கைலாஷ் சத்யார்த்தி

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோர் பெற்றனர்.

குழந்தைகள் உரிமைக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் சேவையை பாராட்டியும், தலிபான் தீவிரவாதிகளின் அடக்குமுறையை எதிர்த்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடி வரும் மலாலாவின் செயலை கவுரவித்தும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் விருது வழங்கிய நார்வே நோபல் கமிட்டி தலைவர் தோர்ப்ஜார்ன் ஜக்லாண்ட் கூறியதாவது: நோபல் பரிசை ஏற்படுத்திய விஞ்ஞானி ஆல்ப்ரெட் நோபல் தனது இதயத்தில் அமைதியின் தூதுவர்கள் என்று கருதி போற்றும் அளவுக்கு தகுதி படைத்தவர்கள் சத்யார்த்தியும், மலாலாவும். இவ்விருதைப் பெறும் ஒருவர் முதியவர், இந்து மதத்தையும் இந்தியாவையும் சேர்ந்தவர். மற்றொருவர் இளம்பெண், இஸ்லாம் மதத்தையும் பாகிஸ்தானையும் சேர்ந்தவர். இது, தேசங்களுக்கு இடையே ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தோர்ப்ஜார்ன் ஜக்லாண்ட் கூறினார்.
புதன்கிழமை ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலா மற்றும் கைலாஷ் சத்யார்த்தி. | படம்: ஏ.பி.
புதன்கிழமை ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலா மற்றும் கைலாஷ் சத்யார்த்தி.

ரூ. 6 கோடியே 20 லட்சம் பரிசு
இருவருக்கும் 1.1 மில்லின் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 6 கோடியே 20 லட்சம்) பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பதக்கமும், பட்டயமும் அளிக்கப்பட்டுள்ளது.

பரிசை பெற்று கைலாஷ சத்யார்த்தி நிகழ்த்திய உரை: 
"இன்று நான் ஆயிரம் மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாக்கள் முன்னேறி வந்து நமக்கு அழைப்பு விடுக்கின்றனர். சிறுவர்களும் சிறுமிகளும் இணைந்தனர், நான் இணைந்தேன். உங்களையும் இணையக் கோருகிறேன்.

நாம் அறிவை ஜனநாயகப்படுத்துவோம்

நீதியை உலகப் பொதுமையாக்குவோம்

நாம் அனைவரும் இணைந்து நமது குழந்தைகளுக்காக தயை குணத்தை உலகமயமாக்குவோம்.

சுரண்டலிருந்து கல்விக்கும், வறுமையிலிருந்து பகிர்ந்து கொள்ளும் வளமை நோக்கியும் நாம் நடைபோடுவோம்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், வன்முறையிலிருந்து அமைதிக்கும் சமாதானத்திற்கும் நடைபோடுவோம்.

இருளிலிருந்து ஒளிக்கு முன்னேறுவோம், மரணத்திலிருந்து தெய்வீகத்திற்கு முன்னேறுவோம்.

ஒரு குழந்தையாக நாளை பற்றிய தரிசனம் எனக்கு இருந்தது. நாளை என்பது இப்போது இன்று என்றாகியுள்ளது. நானும் இன்று, நீங்களும் இன்று. ஒவ்வொரு குழந்தைக்குமான வாழ்வுரிமையும், சுதந்திர உரிமையும், ஆரோக்கிய உரிமையும், கல்வியுரிமையும் பாதுகாப்பு, கவுரவம், சமத்துவம், சமாதானத்திற்கான உரிமைகளும் இன்றைக்கானது.

இன்று, இருளுக்கு அப்பால், சிமிட்டும் நட்சத்திரங்களில் குழந்தைகளின் புன்னகையைக் காண்கிறேன்.

இன்று, ஒவ்வொரு கடலின் ஒவ்வொரு அலையிலும் நமது குழந்தைகள் விளையாடுவதையும் நடனமாடுவதையும் நான் காண்கிறேன். இன்று ஒவ்வொரு மரம், செடி, கொடி, மலை என்று அனைத்திலும் அன்று எனது வகுப்பறையில் என்னுடன் படித்த அந்தச் சிறுவனைக் காண்கிறேன்.

உங்களில் ஒவ்வொருவரின் உள்ளும் நீங்கள் இதனை உணர விரும்புகிறேன். எனதருமை சகோதர சகோதரிகளே நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் கையை சிறிது கணத்திற்கு உங்கள் இருதயத்தின் மீது வைத்துக் கொள்ள முடியுமா? உங்களுக்குள் உள்ள குழந்தையை நீங்கள் உணர முடிகிறதா? இப்போது இந்தக் குழந்தையை கவனியுங்கள், உங்களால் முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

சுமார் 50 ஆண்டுகளோ அதற்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாகவோ, நான் படித்த பள்ளிக்கூடத்தின் வாசலில் நான் முதல் நாளில் ஷூ பாலிஷ் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனைக் கண்டேன். நான் எனது ஆசிரியர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்: “அவர் ஏன் வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்? அவன் ஏன் என்னுடன் பள்ளி வகுப்பறைக்கு வரவில்லை?” என்றேன். என் ஆசிரியர்களிடத்தில் இதற்கு விடையில்லை. ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தச் சிறுவனின் தந்தையிடம் கேட்டேவிட்டேன். அவர் கூறினார்: “ஐயா, நான் இது பற்றி யோசித்ததே இல்லை. நாங்கள் வேலை செய்யவே பிறந்துள்ளோம்” என்றார். எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இப்போதும் அந்த தந்தை கூறியது எனக்கு கோபத்தையே மூட்டுகிறது. அன்று அதனை சவாலாக்கினேன், இப்போதும் அதனை எதிர்த்துப் போராடி வருகிறேன்.

குழந்தைகளுக்கு ஏற்ற கொள்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கல்வியிலும், இளம் தலைமுறைக்காகவும் அரசு முதலீடு செய்ய வேண்டும்.

நமக்கு இன்று அவசர உணர்வுடன் தேவைப்படுவது கூட்டு நடவடிக்கைகள், கூட்டு செயல்பாடுகள். ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், ஒவ்வொரு குழந்தையும் முக்கியம். ஒவ்வொரு குழந்தைப்பருவமும் முக்கியம்.

நமது குழந்தைகளைச் சுற்றிக் காணப்படும் அவநம்பிக்கையை சவாலாக ஏற்கிறேன். மவுனம் காக்கும் பண்பாட்டையும், நடுநிலைகாக்கும் பண்பாட்டையும் நான் சவாலாக ஏற்கிறேன். 

ஆகவே, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும் ஒழிய, ஒழிக்கப்பட நாம் ஒவ்வொருவரும் இணைவோம். 

நாகரிகமான சமூகத்தில் அடிமைத்தனம், குழந்தை கடத்தல், குழந்தை திருமணங்கள், குழந்தைத் தொழிலாளி, பாலியல் வன்முறை, கல்வியின்மை ஆகியவற்றுக்கு இடமில்லை. நண்பர்களே இதனை நாம் செய்ய முடியும். 

டெல்வி என்ற சிறுமி பரம்பரையாக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தில் பிறந்தார். அவரைக் காப்பாற்றி எனது காரில் உட்கார வைத்தவுடன் அந்த 8 வயது சிறுமி கேட்டார்: ஏன் முன்னாலேயே வரவில்லை? என்று அந்தச் சிறுமியின் கோபம் இப்போதும் என்னை நிலைகுலையச் செய்கிறது. அந்தக் கோபம் உலகை உலுக்கக்கூடியது. அவரது கேள்வி நம் அனைவருக்குமானது. நாம் ஏன் முன்பாகவே செல்லவில்லை? நாம் எதற்காகக் காத்திருந்தோம்? இன்னும் எத்தனை டெல்விக்களை காப்பாற்ற முடியாமல் விடப்போகிறோம்? இன்னும் எவ்வளவு சிறுமிகள் கடத்தப்பட, அடிமைப்படுத்தப்பட அனுமதிக்கப்போகிறோம்?

கால்பந்து தைக்கும் அந்த குழந்தைகள் யாருடைய குழந்தைகள்? இன்னும் அவர்கள் விளையாட முடியவில்லையே! சுரங்கத்தொழிலிலும் கல்லுடைப்பதிலும் ஈடுபடும் குழந்தைகள் யார்? சாக்கலேட் சாப்பிட முடியாத ஆனால் கோகோவை பயிர் செய்யும் குழந்தைகள் யார்? இவர்கள் அனைவரும் நம் குழந்தைகள்.

நானும், நீங்களும் அவசரகதி உலகமயமாதல் காலத்தில் வாழ்கிறோம். உயர் வேக இண்டெர்நெட் நம்மை இணைக்கிறது. நம்மை பல விஷயங்கள் இணைக்கிறது.

ஆனால் ஒன்றேயொன்று துண்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் அன்பு, தயை குணம், கருணை. தனிப்பட்ட கருணையையும் அன்பையும் தயா குணத்தையும் உலகமயமாக்க முயற்சி செய்வோம். செயல்படாத நிலையில் ஏற்படும் கருணையோ, அன்போ அல்ல, மாற்றங்களைக் கொண்டு வரும் அன்பு. அதாவது நீதி, சமத்துவம், சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் கருணை, அன்பு.

மகாத்மா காந்தி கூறினார்: நாம் உண்மையில் இந்த உலகிற்கு அமைதியை கற்பிக்க வேண்டுமெனில் நாம் குழந்தைகளிடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். 

18 ஆண்டுகளுக்கு முன்பு 103 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான எனது சகோதர சகோதரிகள் 80,000 கி.மீ. பேரணி சென்றோம். குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சர்வதேச சட்டம் உருவானது. நாங்கள் இதனைச் செய்து காட்டியுள்ளோம்.

ஒரு நபர் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம். எனது குழந்தைப்பருவ கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது: காட்டில் பெரும் தீ மூண்டது. அனைத்து மிருகங்களும் ஓட்டம் பிடித்தன. அப்போது ஒரு சிறிய பறவை நெருப்பை நோக்கி முன்னேறியது. காட்டின் ராஜாவான சிங்கம் அதிர்ச்சியடைந்து எங்கு செல்கிறாய் என்று கேட்டது, நெருப்பை அணைக்கப் போகிறேன் என்றது அந்தப் பறவை. உனது அலகில் இருக்கும் ஒரு துளி நீரால் நெருப்பை அணைத்து விட முடியுமா? என்று சிங்கம் சிரித்தது. அதற்கு அந்த பறவை, ‘நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என்றது. 

இன்று மலாலா போன்ற சிறு வயதினர் எங்கு பார்த்தாலும் எழுச்சி பெற்றுள்ளனர். இவர்கள் வன்முறைக்கு பதிலாக அமைதியை நாடுகின்றனர், தீவிரவாதத்திற்குப் பதிலாக சகிப்புத் தன்மையை நேசிக்கின்றனர். அச்சத்திலிருந்து தைரியத்திற்கு நடைபோட்டுள்ளனர்.

குழந்தைகளின் கனவுகளை மறுப்பது போன்ற மிகப்பெரிய வன்முறைகள் உலகில் இல்லை. 

நோபல் கமிட்டி என்னை சொற்பொழிவு ஆற்ற அழைத்தது, மரியாதையுடன் கூறுகிறேன், நான் அதனை நிறைவேற்ற முடியவில்லை. நான் இங்கு மவுனத்தின் சப்தத்தை, களங்கமற்றதன் அழுகையை பிரதிநிதித்துவம் செய்கிறேன். காணமுடியாததன் முகத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்” என்று உணர்ச்சி பொங்க அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்புமாறு பேசினார் கைலாஷ் சத்யார்த்தி.


அம்ஜத் இசை
இவ்விழாவில் ‘அமைதியின் ராகம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான், அவரின் மகன்கள் அமான், ஆயான், பாகிஸ்தான் இசைக் கலைஞர் ரஹத் படேஹ் அலி கான், நார்வே இசைக் கலைஞர் எட்வர்ட் கிரெய்க் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அசாம் டீ
நோபல் பரிசளிப்பு விழாவையொட்டி தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதில், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விளையும் டீ, சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் விளையும் கீமுன் டீ கலந்து தயாரிக்கப்பட்ட புதிய சுவையுடன் கூடிய டீ பரிமாறப்பட்டது.

Courtesy: The Tamil Hindu.

குறைந்துவரும் இணைய சுதந்திரம்

அரசாங்க கண்காணிப்பு மற்றும் இணையத் தணிக்கை காரணமாக இணைய பயன்பாட்டாளர்களுக்கான சுதந்திரம் என்பது குறைந்து வருவதாக உலகளாவிய இணைய அமைப்பு (www) எச்சரித்துள்ளது.

அரசாங்கங்களின் கண்காணிப்பு காரணமாகவும், இணையத் தணிக்கை காரணமாகவும் இணைய தளங்களில் பயன்பாட்டாளர்களுக்கான சுதந்திரம் என்பது குறைந்து வருவதாக உலகளாவிய இணைய அமைப்பு(www) எச்சரித்துள்ளது.
குறைந்துவரும் இணைய சுதந்திரம்
உலகில் 80 வீதமான நாடுகளில், பெருமெடுப்பில் இணையத்தில் உள்நுழைந்து உளவுபார்ப்பதை தடுப்பதற்கான சட்டங்கள் முற்றிலும் இல்லாமலோ அல்லது பலவீனமாகவோ இருப்பதாக அந்த அமைப்பின் வருடாந்த இணையச் சுட்டி கூறுகின்றது.

இணையத்தில் பாலியல் அடிப்படையில் நடக்கும் வன்செயல்களை தடுக்க உலகின் முக்கால்வாசி நாடுகளின் அதிகாரிகள் தவறிவிடுவதாகவும் அது கூறுகின்றது.

அத்துடன் நாடுகளின் அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக உலகில் 60 வீதமான மக்கள் இணைய தளங்களுக்குள் செல்ல முடியாது இருப்பதாகவும் அது கூறுகின்றது.

குழப்பம் நீடிப்பதால் வங்கிகளை முற்றுகையிடும் மக்கள்: காஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி?- அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க டிச.31ம் தேதி இறுதி நாள் கிடையாது என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோப்புப் படம்
மத்திய அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் எரிவாயு விநியோகஸ்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான விண்ணப்ப படிவங்களை பெறுவதற்காகவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிப்பதற்காகவும் வங்கிகள் மற்றும் எரிவாயு விநியோக மையங்களில் நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. சமையல் எரிவாயு மானியம் பெறுவது தொடர்பாக தெளிவான தகவல்களை தெரிவிக்காததே இதற்குக் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலரான தரணிதரன் என்பவர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை டிச.31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கட்டாயப் படுத்துகின்றனர். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள், 2015 மார்ச் 31ம் தேதி வரை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விண்ணப்பங்களை நகல் அல்லது பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில விநியோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வந்துதான் விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என்றும் ஆதார் அட்டையை நகல் எடுத்து (ஜெராக்ஸ்) இணைப்பதற்கு பதிலாக, அதை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர். மேலும், படிவங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், பாமர மக்கள் அதைப் பூர்த்தி செய்ய பெரும் சிரமப்படுகின்றனர்’’ என்றார்.

இப்பிரச்சினை குறித்து, திருவல்லிக்கேணியில் உள்ள பாரத் எரிவாயு விநியோகஸ்தர் ஒருவர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெறுவதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஆனால், எங்களுக்கு தினசரி வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. இந்நிலையில், எரிவாயு மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறும் பணியும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, விரைவாக இப்பணியை முடிப்பதற்காக நாங்கள் டிச.31ம் தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்கும்படி வாடிக்கையாளர்களிடம் கூறுகிறோம்” என்றார்.

வங்கிக் கணக்கு துவங்குவதில் குழப்பம்

இதனிடையே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கினால்தான் மானியம் கிடைக்கும் என்று கூறப்படுவதால் குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து, திருவல்லிக்கேணியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெற வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அவர்களின் ஆதார் அட்டை எண்ணை நாங்கள் பதிவு செய்து தருகிறோம். டிச.31ம் தேதிக்குள் அவற்றை பதிவு செய்ய வேண்டும் என எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. மேலும், பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் என்ற உடன் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளுக்கு மட்டுமே வருகின்றனர்.

இந்த மானியம் பெற அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கணக்கு தொடங்கலாம். மேலும், இந்த மானியம் பெற பிரதமரின் ‛ஜன்தான்’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என்ற தவறான தகவலும் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. இதனால், சிலர் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்கும் நிலையில், மற்றொரு கணக்கை துவக்கித் தரும்படி கூறுகின்றனர். இது எங்கள் பணிச்சுமையை அதிகரித்துள்ளது’’ என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இப்பிரச்சினைகள் குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெற நான்கு வகையான படிவங்கள் விநியோகிக்கப்படுகிறது. இவற்றைப் பூர்த்தி செய்து எரிவாயு விநியோகஸ்தர்களிடம் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. மேலும், http://petroleum.nic.in/dbt/index.php என்ற இணையதளம் மூலமாகவும் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள் www.rasf.uiadai.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 1800-2333-555 என்ற கால் சென்டர் மற்றும் ஐவிஆர்எஸ் எஸ்எம்எஸ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் www.MyLPG.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
2015, மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் மானியம் கிடைக்கும். அப்படியும் தவறும்பட்சத்தில், ஏப்.1ம் தேதி முதல் ஜுன் 31ம் தேதி வரை இறுதி கெடு வழங்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு பிறகு விண்ணப்பிப்பவர்களுக்கு மானியத் தொகை கிடைக்காது. அவர்கள் சந்தை மதிப்பில்தான் எரிவாயுவை வாங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால் போதும். மேலும், டிச.31க்குள் பதிவு செய்ய வேண்டும் என எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Courtesy: The Tamil Hindu

Wednesday, December 10, 2014

சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறுவது எப்படி? - மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் விளக்கம்

சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் விளக்கியுள்ளார். 
ஆதார் அட்டைக்காக பதிவு செய் வதில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரு கின்றன. இது குறித்த தெளிவான விவரங்களை மாநகராட்சி தெரி விக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறு வது எப்படி என்பது குறித்து தமிழ் நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் “தி இந்து”விடம் கூறியதாவது:
சென்னையில் எத்தனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன?
சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் 15 மண்டல அலு வலகங்கள் மற்றும் அதன் பகுதி அலுவலகங்கள் என மொத்தம் 51 இடங்களில் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இம்மையங் களுக்கான ஆபரேட்டர்களை, பி.இ.எல். நிறுவனம் அனுப்புகிறது. சில மையங்களுக்கான ஆபரேட்டர் கள் இன்னும் அனுப்பப்படவில்லை. ஆபரேட்டர்கள் வந்தவுடன் அந்த மையங்களிலும் பணிகள் தொடங்கப்படும்.
மையங்கள் இயங்கும் நேரம் மற்றும் விடுமுறை நாள் எது?
இந்த மையங்கள் ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை இயங்கும். ஒரு ஆப ரேட்டர் ஒரு நாளில் 60 பேரின் விவ ரங்களை பதிவு செய்ய முடியும். பணிக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் மையங்கள் திறக்கப்படும். செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும்.
இந்த நிரந்தர மையங்கள் எத்தனை மாதங்கள் இயங்கும்?
தமிழக அரசு உத்தரவுப்படி இந்த நிரந்தர மையங்கள் ஓராண்டு, அதா வது அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை இயங்கும்.
ஆதார் அட்டையைப் பெற பொது மக்கள் என்ன செய்ய வேண்டும்?
கடந்த 2010-ம் ஆண்டு அரசு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப் பட்ட அத்தாட்சி சீட்டை கொண்டு வர வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யாத வர்கள், அதற்கான விண்ணப்பங் களை பெற்று பூர்த்தி செய்து, மையங்களில் வழங்கி, ஆபரேட் டர்கள் தெரிவிக்கும் தேதியில் வந்து தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.
என்னென்ன ஆவணங்களை பொது மக்கள் கொண்டுவர வேண்டும்?
பொதுமக்கள் தங்கள் புகைப்படம் இடம்பெற்ற, அரசு அறிவித்துள்ள அடையாள ஆவணங்களான குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ளலாம். ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.
எந்த மையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்துகொள்ளலாமா?
பொதுமக்கள் எந்த மையத் தில் வேண்டுமானாலும் ஆதார் அட்டைக்கு பதிவு செய்துகொள்ள லாம். ஆனால் அந்த மையம், அவர்கள் குடியிருக்கும் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
புகார் தெரிவிக்க யாரை தொடர்பு கொள்ளலாம்?
மாநகராட்சி புகார் எண்ணான 1913-ல் புகார் தெரிவிக்கலாம்.
இதுவரை எத்தனை பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 94 ஆயிரத்து 5 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதில் 24 லட்சத்து 4 ஆயிரத்து 17 பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 89 ஆயிரத்து 988 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.
விவரங்கள் பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆதார் அட்டைக்கு விவரங்களை பதிவு செய்து அட்டை கிடைக்காதவர்கள், அட்டையின் நிலை குறித்து http://uidai.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதில் ரத்து செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டபோது வழங்கப்பட்ட அத்தாட்சி சான்றுடன் வந்து, எந்த ஆவணத்தையும் வழங்காமல், மீண்டும் விரல் ரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மையத்தில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை சந்திக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Courtesy: The Tamil Hindu.

Tuesday, December 09, 2014

ஸ்மார்ட் போன் கழுத்துவலி


குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட் போனையே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. “ஸ்மார்ட் போன்களால் கழுத்து வலி உண்டாகும் அபாயம் உள்ளது. இதைப் பற்றி யோசிப்பது அவசியம்” என எச்சரிக்கிறார் அமெரிக்க மருத்துவரான டாக்டர் கென்னத் ஹான்ஸ்ராஜ். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும்போது நாம் கழுத்தை வைத்திருக்கும் விதம் கழுத்து மீதான சுமையை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 மணி நேரம் ஸ்மார்ட் போனில் செலவிடுவதால் கழுத்து வலி பாதிப்பு ஏற்படலாம் என அவர் எச்சரிக்கிறார். இதற்கு டெக்ஸ்ட் நெக் எனப் பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பிளாக்பெரி தம்ப், ஐபேட் தம்ப் ஆகிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இப்போது இந்தப் புதிய வலி சேர்ந்திருக்கிறது.

நன்றி : தி இந்து 

டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் இருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.42 கோடி சம்பளத்துடன் வேலை

டெல்லி ஐ.ஐ.டி.யில் கணினி பயிலும் மாணவர்கள் இருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.42 கோடி சம்பளத்துடன் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஐ.ஐ.டி. மாணவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தில் இதுவே மிக அதிகமானது எனக் கூறப்படுகிறது.
கேம்பஸ் இன்டர்வியூவ் குறித்து டெல்லி ஐ.ஐ.டி ஒருங்கிணைப்பாளர் அக்‌ஷய் மாலிக் கூறும்போது, "இரண்டு மாணவர்கள் ஆண்டுக்கு 2,30,000 அமெரிக்க டாலர் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது.
இந்த நேர்காணல் வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சராசரி சம்பளமாக இருக்கிறது. முதல் முறையாக ஜப்பானிய நிறுவனங்கள் பல வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. அதுவும் இந்தியாவில் உள்ள தங்களது கிளைகளைலேயே வேலை வழங்கியுள்ளன" என்றார்.

நன்றி : தி இந்து 

ஆசிரியர் பயிற்சி பணி முடித்து கல்லூரிக்கு வருகை தரும் பி எட் மாணவர்கள் அனைவரும் வருக வருக...

ஆசிரியர் பயிற்சி பணி முடித்து  கல்லூரிக்கு வருகை தரும் பி எட் மாணவர்கள் அனைவரும் வருக வருக....

காப்புரிமை பெறுவது எப்படி?

தாராளமயமாக்கல் வந்தபிறகு பல நாடுகளுக்கும் உங்கள் தயாரிப்புகளை அனுப்புவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் வந்துவிட்டன. 1990-ம் ஆண்டிலிருந்தே இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், காப்புரிமை சட்ட மசோதா 1999-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.
உங்களது தயாரிப்புகளை நீங்கள் தயாரித்து விற்பனை செய்யலாம். உங்கள் பொருளுக்கு அதிக கிராக்கி நிலவும்போது அதை மற்றவரும் காப்பி செய்து தயாரிக்கலாம். இதனால் உங்களது உழைப்பு வீணாகும். லாபமும் குறையும். இதைத் தவிர்க்கத்தான் காப்புரிமை பெறுவது அவசியம். பொருளுக்கு மட்டுமின்றி வடிவமைப்புக்கும் (டிசைன்) காப்புரிமை பெறலாம்.
# காப்புரிமை அலுவலகம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
# காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கொல்கத்தாவி லும் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னையில் உள்ளன. இதனால் சென்னையிலேயே காப்புரிமை பெறலாம்.
# ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படும்.
# புதிதாக எந்த ஒரு தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள பொருள்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தால் அதற்கும் காப்புரிமை பெறலாம். கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயமாகும்
# நீங்கள் தயாரித்த பொருளுக்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறதா என்பதை இணையதளத்தில் தேடி தகவல்களைப் பெறலாம்.
# இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை குறித்த தகவல்கள் பற்றிய விவரத்தை ipindia@nic.in என்ற மின்னஞ்சல் மூலமும், சென்னை அலுவலகம் பற்றிய விவரத்தை chennai-patent@nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் பெறலாம். wipo என்ற இணையதள தேடுதல் மூலம் பிற நாடுகளில் எந்தெந்த பொருள்கள் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
# காப்புரிமை பெறுவதற்கு படிவம் -2 ஐ பூர்த்தி செய்ய வேண்டும். இது தவிர படிவம் -1 மற்றும் படிவம் -18-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
வெளிநாட்டுத் தயாரிப்புக்கு காப்புரிமை
ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் காப்புரிமைக்காக விண்ணப்பிக் கின்றனர். இவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டினர். தங்களது தயாரிப்பு களை இந்தியாவில் விற்பதற்காக இவர்கள் காப்புரிமை செய்கின்றனர்.
இதேபோல இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். உங்க ளுடைய தயாரிப்பைப் போல் மற்றவர்கள் காப்பி செய்து விற்க முடியாது. வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியாவில் காப்புரிமை செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்கிறார் சென்னை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்புப் பிரிவு இணை ஆணையர் ஆர். தேவன்.
ராயல்டி தொகை
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கண்டுபிடிப்புகளை தங்களது துறைகளில் மேற்கொள்கின்றனர். இவற்றை பதிவு செய்து காப்புரிமை பெற்றால், அந்த தயாரிப்பால் பயன் பெறும் நிறுவனங்கள் அதற்கு ராயல்டி தொகை அளிக்கும். இதன் மூலம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பயனைடையும். வெளிநாடுகளில் காப்புரிமை பெறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவிலும் இந்த நடைமுறை வந்தால் காப்புரிமை பெறுவது அதிகரிக்கும். நமது தயாரிப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் எளிதில் கிடைக்கும்.
பொறியியல் மாணவர்கள் காப்பீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம். காப்புரிமை ஆய்வாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. காப்பீடு முகவர் போன்று இவர்கள் செயல்படலாம் என்று தேவன் குறிப்பிட்டார்

நன்றி: தி இந்து 

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?


இந்த நிலையில் இந்த நேரடி மானியத் திட்டத்தில் விண்ணப்பம் செய்வது எப்படி? எப்போது கிடைக்கும்? யாரெல்லாம் மானியம் பெற தகுதியுள்ளவர்கள் என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளன. இவற்றைத் தீர்க்கும் விதமாக சம்பந்தபட்ட நிறுவன அதிகாரிகளையே தொடர்பு கொண்டோம். அவர்கள் அளித்த தகவலை சரிவர பின்பற்றினாலே மானியம் கிடைக்கும் என்பது புலனாகியது.

மத்திய அரசு அறிவித்தபடி சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதற்கட்டமாக ஆந்திரம், கேரளம், அசாம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 54 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் 2015 ஜனவரி 01 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எரிவாயு விநியோகஸ்தர்கள் வழங்கி வருகின்றனர். ஆன்லைன் மூலமாகவும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
திட்டத்தின் நோக்கம்
சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஒதுக்கி இதை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கே நேரடியாகக் கொடுத்து வந்தது. ஆனால் சமையல் எரிவாயுவுக்கு கொடுக்கப்படும் மானியம் நேரடியாக பயனாளிகளுக்கே சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நேரடி மானிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சந்தை விலையில் சமையல் எரிவாயுவை வாங்கிக் கொள்ள இந்த மானியத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
யாரை அணுகுவது
சமையல் எரிவாயு முகவர்கள் மற்றும் வங்கிகள் மூலமாக இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நான்கு வகையான விண்ணப்பப்படிவங்கள் உள்ளன. எரிவாயு முகவர்கள் மூலமாக விண்ணப்பம் செய்யும்போது படிவம் 1 அல்லது 3 இதில் ஏதாவது ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வங்கி மூலமாக விண்ணப்பம் செய்பவர்கள் படிவம் 2 அல்லது 4 இதில் ஏதாவது ஒன்றின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
சில முகவர்கள் வங்கி மூலமாக செய்கிற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து வங்கிகளிடத்தில் கொடுக்கும் ஏற்பாட்டையும் செய்கின்றனர். இதற்கு என்று தனியாக இணையதளம் உள்ளது. அதன் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம்.
விண்ணப்பம் வாங்குவதற்கு அல்லது விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் கிடையாது. இணையதள முகவரி: http://petroleum.nic.in/dbt/index.php
ஆதார் அட்டை
இந்தத் திட்டதில் சேர ஆதார் அட்டை முக்கியம். ஆதார் அட்டை இல்லை என்றாலும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு ஒரு விண்ணப்ப படிவமும், ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு மற்றொரு விண்ணப்பப் படிவமும் உள்ளது. விண்ணப்பித்த பிறகு ஆதார் அட்டை எடுத்து கொடுக்க வேண்டும்.
வங்கிக்கணக்கு அவசியம்
இந்த நேரடி மானியத் திட்டத்துக்கு வங்கிக் கணக்கு அவசியம் இருக்க வேண்டும். தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கி கணக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். வங்கிக்கணக்கு மூலமாகத்தான் இந்த மானியம் பயனாளிகளுக்குச் சென்று சேரும். கையில் பணமாக கொடுக்கப்பட மாட்டாது என்று வங்கித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
மானியம் எவ்வளவு:
ஒவ்வொரு மாதமும் சந்தை விலைக்கு ஏற்ப மானியத் தொகை வேறுபடும். இண்டேன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு 14.2 கிலோ அடைக்கப்பட்ட சிலிண்டரின் டிசம்பர் மாத சந்தை விலை ரூ. 755 மானிய விலையில் ரூ 400-க்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன்படி தோராயமாக ரூ 350 மானியம் என கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நேரடி மானிய திட்டத்தில் இவ்வளவுதான் மானியம் என்பதை அரசு வரையறுக்க வில்லை.
மானியம் எப்போது?
2015 ஜனவரி 01 முதல் இந்த நேரடி மானியம் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வர உள்ளது. எரிவாயு நிறுவனங்களால் பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டதும் பயனாளியின் வங்கிக் கணக்கில் முன்பணமாக ரூ. 568 வரவு வைக்கப்படும். அதற்கு பிறகு வாங்கும் சிலிண்டருக்கு தற்போதைய சந்தை விலை என்னவோ அதை கொடுத்து வாங்க வேண்டும்.
இந்த சிலிண்டருக்கு உரிய மானியம் அடுத்த இரண்டொரு வேலைநாட்களில் வங்கிக்கணக்கில் போடப்படும். இது போல நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும், வாங்கிய பிறகு மானியம் கணக்கிடப்பட்டு வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த முன்பணத் தொகை அப்படியே இருக்கும். எரிவாயு இணைப்பை சரண்டர் செய்யும்போது திரும்ப கொடுக்க வேண்டும்.
யாருக்குக் கிடைக்காது?
தற்போது மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்கிக் கொண் டிருக்கும் அனைவரும் இந்த நேரடி மானிய திட்டத்தில் பயன் பெறலாம். இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் பெயரில் உள்ள வங்கிகணக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். எரிவாயு இணைப்பு ஒரு பெயரிலும், வங்கிக்கணக்கு வேறொரு பெயரிலும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எரிவாயு இணைப்பு வாங்கிய நபர் உயிருடன் இல்லை என்றால் அவரது வாரிசுகள் நேரடியாக இந்த மானியத்தை பெற முடியாது. எரிவாயு இணைப்பை தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்ட பிறகே தகுதி பெறுவார்கள். எனவே முதலில் பெயர் மாற்ற வேலைகள் செய்துவிட்டுதான் விண்ணப்பிக்க முடியும்.
கடைசி தேதி
ஜனவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த மாதங்களில் சமையல் எரிவாயுவுக்கான தொகை வழக்கமாக கிடைக்கும் மானிய விலையில்தான் இருக்கும்.
ஏப்ரல் 01 முதல் ஜூன் 31 வரை யிலும் விண்ணப்பம் செய்ய கடைசி கெடு தேதி. இந்த நாட்களுக்குள் விண்ணப்பித்தால் அந்த மாதத்திற்கான மானியத் தொகையை இருப்பு வைத்திருப்பார்கள். ஆனால் சமையல் எரிவாயுவை அப்போதைய சந்தை மதிப்பில்தான் வாங்க வேண்டும். சந்தை மதிப்பில் வாங்கிவிட்டு பிறகு மானியத்தை கிளைம் செய்து கொள்ளலாம்.
இந்த ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்யாமல், ஜூலை 01க்கு பிறகு பதிவு செய்பவர்கள் வழக்கமான சந்தை மதிப்பு என்னவோ அதைக் கொடுத்துதான் வாங்க வேண்டும். அந்த மாதத்திலிருந்து மானியம் கிடைக்கும்.
வருகிற ஜனவரியிலிருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்.
எரிவாயு இணைப்பு வாங்கிய நபர் உயிருடன் இல்லை என்றால் அவரது வாரிசுகள் நேரடியாக இந்த மானியத்தை பெற முடியாது. எரிவாயு இணைப்பை தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்ட பிறகே தகுதி பெறுவார்கள்.

நன்றி: தி இந்து