#

#

#

#

#

#

#

#

#

#

Sunday, November 25, 2018

அன்பாசிரியர் - செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்!

11 முறை 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து விருது, 13 விஞ்ஞானிகளிடம் விருது, பாராட்டு, 5 அமைச்சர்களிடம் இருந்து விருது இவையனைத்தும் அன்பாசிரியர் செங்குட்டுவனுக்குக் கிடைத்தவை அல்ல. தன் மாணவர்கள் இந்த விருதுகளைப் பெற தனியொருவராக இருந்து தகுதிப்படுத்தியவர் அவர்.
''சிறுவனாக இருந்தபோது தினமும் காலையில் 8 கி.மீ. நடந்து பள்ளிக்குச் செல்வேன் , மாலையில் மீண்டும் 8 கி.மீ. நடக்க வேண்டும். அறிவியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, ஒருமுறை அறிவியல் கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 15 ரூபாய் இல்லாத காரணத்தால் அதற்குச் செல்ல முடியவில்லை. அந்த ஏக்கமும் வலியும்தான் இன்று இந்தியா முழுக்க என்னுடைய சொந்த செலவில் ஏராளமான மாணவர்களை அறிவியல் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்ல உந்துகிறது என்கிறார்'' செங்குட்டுவன்.
''எனக்குக் கிடைக்காமல் போனது, ஒருபோதும் என் மாணவர்களுக்குக் கிடைக்காமல் போகக் கூடாது'' என்னும் அன்பாசிரியர் செங்குட்டுவன், கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுத்ததே இல்லை. காலம் தவறாமையைப் பின்பற்றும் அவர், பெரும்பாலான சனி, ஞாயிறுகளில் பள்ளிகளில் மாணவர்களுடன் செலவழிப்பதாய்ச் சொல்கிறார். ''விடுமுறை எடுக்காமல் சென்றதில் பெருமை இல்லை, அதைக் கொண்டு மாணவர்களைச் சாதனையாளர்கள் ஆக்கியதில்தான் பெருமை'' என்கிறார்.
தனது நெடும் பயணத்தை அவரே விவரிக்கிறார்...
''2005-ல் அரசுப் பணி கிடைத்து, அரியலூர் மாவட்டம், தேவாமங்கலம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஆனேன். சில நாட்களிலேயே அங்கிருந்த மாணவர்களை அறிவியல் புத்தாக்கக் கண்காட்சிக்காக அரியலூர் அழைத்துச் சென்றேன். முறையாக பயிற்சி எடுத்து, நாங்களே உருவாக்கிய அறிவியல் உபகரணங்களோடு போட்டியில் பங்கெடுக்கத் தயாரானோம்.
முதல் வெற்றி
பேருந்தில் பயணித்ததால் குழுவில் இருந்த மாணவனுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டது. பள்ளிக்குச் சென்றுவிட்டதால் மாற்று உடை வாங்க முடியவில்லை. அங்கேயே அதைத் துவைத்துக் காயவைத்தேன். மாணவனுக்கு ஆறுதல் சொல்லிப் போட்டியில் பங்கேற்க வைத்தேன். அன்று அறிவியல் போட்டியில் அந்த மாணவனுக்கு மாவட்டத்தில் முதலிடம் கிடைத்தது. அதுதான் எங்களின் முதல் வெற்றி.
அடுத்த முறை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தோம். அதற்கடுத்த தடவை 2013-ல் மாநிலத்தில் முதல் பரிசு பெற்று, தங்கப் பதக்கத்தைப் பெற்றோம். தேசிய அளவிலான போட்டியில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டாலும் சிறப்புப் பரிசு கிடைத்தது. 2014-ல் மத்திய அரசு நடத்திய தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட 5 மாணவர்கள் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர். ‘ரேஷன் கடைகளில் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களை விநியோகித்து, மக்களின் சர்க்கரை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்’ என்ற செயல் திட்டத்துக்கு அந்த விருது கிடைத்தது.
அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள்
அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்களைப் பங்குபெறச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய இலக்கு. இதற்காகவே நன்றாகப் பேசும் மாணவனை பேச்சுப் போட்டியிலும் கையெழுத்து சிறப்பாக இருப்பவர்களைக் கட்டுரைப் போட்டியிலும் பங்குகொள்ள உத்வேகமூட்டுவேன். அதேபோல ஓவியம், பாட்டு, விளையாட்டு, யோகா என அனைத்துப் போட்டிகளிலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்பர்.
இதற்கான முன் தயாரிப்புகளுக்கு சனி, ஞாயிறுகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மாணவர்களும் முகம் சுளிக்காமல் பள்ளிக்கு வருகின்றனர். போட்டிகளில் பங்கெடுப்பதாலேயே பரிசு பெற வேண்டும் என்று மாணவர்களிடம் சொல்வதில்லை. அதே நேரம் எங்களின் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியால் அவர்கள் பரிசு வாங்காமல் திரும்பியதில்லை.
மாவட்ட அளவிலான போட்டிகள், மாநிலப் போட்டிகளுக்கு என்னுடைய சொந்த செலவிலேயே மாணவர்களை அழைத்துச் சென்றுவிடுவேன். தேசிய அளவில் தேர்வாகும்போது பெரும்பாலும் உதவித்தொகை கிடைத்துவிடும். இல்லாதபட்சத்தில் நானே செலவழித்துவிடுவேன், பணத்தால் மாணவர்களின் முயற்சி தடைபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சொந்த செலவில் அறிவியல் ஆய்வகம், மூலிகைத் தோட்டம்
பள்ளியில் என்னுடைய சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் அமைத்தேன். ஆசிரியப் பணிக்கு முன்னால் மெக்கானிக்காக இருந்ததால், பள்ளிக்கான வயரிங் வேலையை நானே செய்துவிடுகிறேன். மாணவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வத்தை உருவாக்க மூலிகைத் தோட்டம் உருவாக்கினோம். ரூ.16 ஆயிரம் செலவு செய்து, நானே குழிதோண்டி, காய்கறிச் செடிகள், கீரைகள், மூலிகைகள் ஆகியவற்றைப் பயிரிட்டேன்.
தொடர் முயற்சிகளால் ஆங்கிலத்தில் பெயரை எழுதக்கூட சிரமப்பட்ட மாணவர்கள் பலர், இன்று அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கிறார்கள். அவர்களை மற்ற பள்ளிகள் தத்தெடுத்துக் கொள்கின்றன. என்னிடம் படித்த மாணவர் கதிரவன் இப்போது எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டார். ஏராளமானோர் இளங்கலை, முதுகலைப் படிப்பை முடித்துப் பணியில் இருக்கின்றனர். மெல்ல மெல்ல தேவாமங்கலம் பள்ளி தலைசிறந்த பள்ளியாக உருமாறியது.
இப்போது அங்கிருந்து ஜெயங்கொண்டம், புதுச்சாவடி பள்ளிக்கு கேட்டு வாங்கி மாறுதல் பெற்றுள்ளேன். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கம்பளத்தார் (குடுகுடுப்பைக்காரர்கள்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாடோடிகளாக இருப்பதால் அவர்களின் குழந்தைகள் முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை. பெண்களையும் படிக்க வைப்பதில்லை. இதை மாற்ற எண்ணி செயலாற்றி வருகிறேன். அதன் ஒருபகுதியாக பள்ளிக்கு மாற்றலான ஒரே மாதத்தில் மாணவர்கள் சிலரை லக்னோவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றேன். கண்காட்சி முடிந்த பிறகு குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினோம்.
88 ஆண்டு வரலாற்றில்...
அச்செய்தி பல்வேறு நாளிதழ்களில் வந்தது. பள்ளியின் 88 ஆண்டுகால வரலாற்றில், இதுதான் செய்தித்தாள்களில் வருவது முதல்முறை என்று பொது மக்கள் நெகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்காக 5 மின்விசிறிகள், 5 லைட்டுகளை அளித்தனர்.
அதேபோல லக்னோ சென்றுவந்த கம்பளத்தார் சமூக மாணவன் ஒருவனை, அவனின் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இப்போது என் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. அதைக் கொண்டு அங்குள்ள மாணவிகளை முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக்க வேண்டும். சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிக் கட்டிடங்களைப் புதுப்பிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல், அதே நேரம் மழை வந்தால் ஒழுகும் கழிப்பறைகளைச் சீர்படுத்த வேண்டும்.
வரமான குடும்பம்
''இன்னும் வாடகை வீட்லதான் இருக்கார்; இவருக்கு பென்ஷன் கூடக் கிடையாது. இப்படி வேலை செய்றதால இவருக்கு சிலையா வைக்கப் போறாங்க?'' என்று சக ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறேன். என் மனைவியும் ஆசிரியர் என்பதால் என்னுடைய மனநிலையைப் புரிந்துகொள்கிறார். என் பிள்ளைகள் அவர்களாகவே படித்துக் கொள்கிறார்கள். என் குடும்பம் எனது வரம்.
என் மாணவர்கள்தான் என்னுடைய முதலாளி, எஜமானர், நீதிபதி எல்லாமே. எக்காரணத்தை முன்னிட்டும் என் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' தீர்க்கமாய்ச் சொல்கிறார் அன்பாசிரியர் செங்குட்டுவன்.
அன்பாசிரியர் செங்குட்டுவனின் தொடர்பு எண்: 8248474808
Courtesy: The Isai Tamil Hindu

Thursday, November 22, 2018

1,398 விவசாயிகளின் ரூ.4 கோடி வேளாண் கடனை செலுத்திய அமிதாப் பச்சன்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து 398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சியால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வந்தனர். அதில் 350 விவசாயிகளின் கடனை வங்கியில் செலுத்தி அவர்களைத் தற்கொலையில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் வங்கிக் கடனையும் அடைத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
''உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகள் வங்கியில் வாங்கியிருந்த வேளாண் கடனை நான் திருப்பிச் செலுத்தியுள்ளேன். இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.4.05 கோடியாகும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட 70 விவசாயிகளை மும்பைக்கு அழைத்து வந்து என்னைச் சந்திக்கச் செய்து உதவினேன்.
வறுமையில் வாடும் விவசாயிகளை மீட்கவும், அவர்களின் சுமையைக் குறைக்கவும் என்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்வேன். முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 350 விவசாயிகள் கடன் அடைக்கப்பட்டது. இப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,398 விவசாயிகள் கடன் நிலுவைத் தொகை அடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மனதில் அமைதியும் ஏற்படும். விருப்பமும் நிறைவடையும்''.
இவ்வாறு நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

Courtesy:  Hindu Tamil Isai

Sunday, November 18, 2018

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.


எலுமிச்சை சாறு மற்றும் தேன்
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.

துளசி சாறு

வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது. துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.


பாலில் மிளகுத் தூள்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.

இஞ்சி சாறு

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.


கேரட் சாறு

உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Thursday, November 15, 2018

புயல் கனமழை வெள்ளம் - விழிப்புணர்வு காணொலி*

புயல் கனமழை வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன விழிப்புணர்வு காணொலி*

Tuesday, November 13, 2018

சிகா கல்வியியல் கல்லூரி - கப்பியாம்புலியூர் கிராமம்- டெங்கு விழிப்புணர்வு பேரணி!!!

நவம்பர்-13-2018 இன்று சிகா கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிற்சி மாணவ, மாணவிகள் கப்பியாம்புலியூர் கிராமத்தில்- டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.




அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை!

கடைசி வரை கற்றுக்கொண்டே இருப்பவர் - ஆசிரியர்
'மாணவர்களுக்காக என் நகைகளை அடகு வைத்து, ரூ.1.75 லட்சம் செலவில் வகுப்பறையை மேம்படுத்தியது பெரிதில்லை. அவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கற்பித்து தன்னம்பிக்கை மிக்க மாணவர்களாய் மாற்றுவதையே பெருமையாய் நினைக்கிறேன்' என்கிறார் இந்த அத்தியாய அன்பாசிரியர் அன்னபூர்ணா.
''விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் முதல் பணி கிடைத்தது. அங்கே ஒழுங்காய்த் தலை வாராமல், மூக்கொழுக, அழுது கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பணியை விட்டுவிடலாம் என்று நினைத்து, பகுதி நேரத்தில் பிசிஏ மற்றும் எம்பிஏ முடித்தேன். அந்த 5 வருடங்களில் மாணவர்கள் என்னை நெருங்கி வந்தாலும், நான் ஒதுங்கிப் போனேன். மெல்ல மெல்ல எனக்கும் அவர்களைப் பிடிக்க ஆரம்பித்தது.
ஆசிரியராகவே தொடர முடிவு செய்து, முதுகலை ஆங்கிலம் முடித்தேன். மாணவர்களுக்கு ஏபிசிடியை மட்டுமே சொல்லிக் கொடுப்பது ஒரு கட்டத்தில் போரடித்தது. நான் படித்த ஆங்கிலமும் மறக்க ஆரம்பித்தது. அதனால் பள்ளியில் ஆங்கிலத்தில் உரையாட முடிவு செய்தேன். காலை முதல் மாலை வரை மாணவர்களுடன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினேன்.
ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள், சிறிது நாட்களில் தடுமாறியவாறு பேசத் தொடங்கினர். நாட்கள் செல்லச்செல்ல தன்னம்பிக்கையுடன் சரியான உச்சரிப்போடு பேச ஆரம்பித்தனர். ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதால் அனைத்துப் பாடங்களையும் அவர்கள் எளிதில் புரிந்துகொண்டனர்.
உச்சரிப்பு முறை கற்பித்தல்
அரசு அளித்த ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை முறையாகப் பயன்படுத்திக் கொண்டேன். உச்சரிப்பு முறையிலேயே (Phonetics) அனைத்துப் பாடங்களையும் கற்பித்தேன். எங்கள் பள்ளி ஒன்றிய மேற்பார்வையாளர் உச்சரிப்பு முறைக் கற்பித்தலைத் தொகுத்து சிடியாக வெளியிடச் சொன்னார். அதில் சொல்லுக்கான ஒலிபெயர்ப்பு (Transcription), தமிழ் அர்த்தம், சொல்லின் வகை, உச்சரிப்பு ஆகியவை இருக்கும்.
8 ஆசிரியர்கள் இணைந்து முதல் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தின் அனைத்துச் சொற்களையும் எடுத்துக் கொண்டோம். அவற்றில் இருந்து தொகுப்பு ஒன்றைத் தயாரித்து முதல் பருவத்தை வெளியிட்டோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவங்களுக்கான சொற்களை நானே தயாரித்தேன். சுமார் 10,000 சொற்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கொண்ட தொகுப்பை சிடியாக வெளியிட்டோம். ஆர்வம் கொண்ட பள்ளிகளுக்கு அதை இலவசமாக வழங்கிவருகிறேன்.
தொடுதிரையில் உச்சரிப்பு முறையில் கற்பிக்கும் அன்பாசிரியர் அன்னபூர்ணா
என்னுடைய உதவி இல்லாமலே மாணவர்கள் படிக்கவேண்டும். அதனால் என்னுடைய மடிக்கணினியில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளேன். அத்துடன் 4 டேப்லட்டுகளையும் சொந்த செலவில் மாணவர்களுக்காக வாங்கியுள்ளேன். அவற்றின் உதவியோடு புதிய வார்த்தைகளை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
அசத்தும் அபாகஸ் கற்றல்
ஆர்வத்தின் காரணமாக ரூ.2.50 லட்சம் செலவில் அபாகஸ் படித்தேன். நானே அபாகஸ் உபகரணங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 100 கணக்குகளை என் மாணவர்கள் 5 நிமிடத்தில் போட்டுவிடுவார்கள். கணினி, டேப்லட்டுகள், அபாகஸ் உபகரணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கப் பள்ளியில் இடம் இல்லை.
அதனால் தினமும் அவற்றை பள்ளிக்கு கொண்டுவந்து, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன். பள்ளிக்கு தினமும் 4 பைகளைச் சுமந்துவரும் என்னைப் பலரும் விசித்திரமாகப் பார்த்திருக்கின்றனர்'' என்று சிரிக்கிறார் அன்னபூர்ணா.
அரசுப் பள்ளியொன்றின் 3-ம் வகுப்பு அறை அது. பன்னாட்டுப் பள்ளியொன்றின் வகுப்புக்குள் நுழைந்தது போல, அத்தனை வசதிகளோடு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. கொடையாளர்களின் உதவியோடு இவற்றைக் கட்டவில்லை. என்ன செய்தார் அன்னபூர்ணா? அவரே சொல்கிறார்.
ஆங்கிலப் பாடங்களைப் படிப்பதோடு நிறுத்தாமல், அவற்றைக் கருவாக வைத்து மாணவர்களைக் கொண்டு நாடகம் போட்டோம். அதையும், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புகளையும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவாக இட்டேன். யாரென்றே தெரியாத நண்பர்கள், அதைக் கண்டு மாணவர்களுக்கு உதவினர். அப்போதுதான் அவர்களே நம் மாணவர்களுக்கு உதவும்போது, நாம் ஏன் உதவக்கூடாது என்று தோன்றியது.
முதலில் நம் வகுப்பறையை மாற்றத் திட்டமிட்டேன். யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என்பது என்னுடைய கொள்கை. அதனால் நானே அதைச் செய்ய முடிவுசெய்து, செயல்படுத்தினேன். கையில் அவ்வளவு பணம் இல்லாததால், நகையை அடகு வைத்துப் பணம் புரட்டினேன். கிடைத்த ரூ.1.75 லட்சத்தைக் கொண்டு வகுப்பறைக்குத் தரமான மேசை, நாற்காலிகள், ஸ்மார்ட் வகுப்பறை, தொடுதிரை, மின்விசிறி, தரை ஓவியங்கள் அமைத்தேன்.
தன் சொந்த செலவில் அன்னபூர்ணா அமைத்த வகுப்பறை
பெரும்பாலான மாணவர்களின் கண்கள் கலங்கியிருந்தன. சில மாணவிகள் ஓடிவந்து அம்மா எனக் கட்டிக்கொண்டார்கள். எத்தனை நெகிழ்வான தருணம் அது? அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அதன்பின்னர் இன்னும் அதிகம் அவர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது.ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். மாணவர்களுக்காக நாம் எடுக்கும் முயற்சியை, அடையும் துன்பங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். அப்பாவின் 88-வது பிறந்தநாளுக்காக அம்மாவுக்கு ஒரு தோடு வாங்கினோம். அடகு வைக்கும்போது அதையும் சேர்த்தே வைத்தேன். மாணவர்களிடம் 'அப்பா இப்போது உயிருடன் இல்லை என்றாலும் உங்களுக்காக அதைச் செய்தேன்' என்று கூறினேன்.
எதிர்காலத் திட்டங்கள்
எங்கள் வகுப்பறை போலவே பள்ளியின் மற்ற வகுப்பறைகளையும் மாற்றவேண்டும். நேற்று கூட பள்ளிக்குள் பெரிய பாம்பொன்று புகுந்துவிட்டது. மாணவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான சீருடைகளை வழங்கவேண்டும். நம்மையே நாம் ஒருமுறை நிரூபித்துவிட்டால், நிச்சயம் மக்கள் உதவுவார்கள் என்பது என் நம்பிக்கை.
சில ஆசைகளும் இருக்கின்றன. அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் என் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கவேண்டும். ஆங்கிலத்தின் முக்கியத்தையும், தேவையையும் உணர்ந்து தமிழக அரசு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உச்சரிப்பு முறைக் கற்றல், கற்பித்தலை அறிமுகப்படுத்த வேண்டும். ஆங்கிலம் என்ற மொழியின் மீதான பயம் முற்றிலுமாக ஒழிய வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். இவையனைத்தும் நிறைவேறும்பட்சத்தில் ஆசிரியப் பணிக்கான என் நோக்கம் நிறைவேறும்'' என்கிறார் அன்பாசிரியர் அன்னபூர்ணா.
அன்பாசிரியர் அன்னபூர்ணாவின் தொடர்பு எண்: 9994219325
Courtesy:-