#

#

#

#

#

#

#

#

#

#

Wednesday, October 31, 2018

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க 10 ஆலோசனைகளைச் சொல்லும் பள்ளிக் கல்வித் துறை!

தமிழக பள்ளிக் கல்வித் துறை, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதுகுறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.  இதைத் தலைமை ஆசிரியர்கள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தெரிவித்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பள்ளிக்கல்வித் துறை

தீபாவளிக்கு முன் தினமான திங்கள்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளிப் பண்டிகையின்போது மாணவர்களுக்குத் தீ விபத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரும் காலையில் இறை வணக்கக் கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதுகுறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிட வேண்டும். இதை, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.


பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பதுகுறித்து  10 ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

1. குழந்தைகள், பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இளம் சிறார்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்கக் கூடாது.

2. பட்டாசு கொளுத்தும்போது, தளர்வான ஆடைகள் உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.

3. பட்டாசு கொளுத்துமிடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ளுங்கள்.

4. பட்டாசை கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகிலோ வைத்து பற்றவைக்கக் கூடாது. மாறாக, பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். வெடிக்காத பட்டாசுகளைக் குனிந்து பரிசோதிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

5. மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டில்களின் மேல் வைத்து பட்டாசுகளை வெடிக்கச் செய்யாதீர்கள். கண்ணாடிப் பொருள்கள் வெடித்து கண்களில் பட்டு, கண் பார்வை பாதிப்படையக் கூடும்.

6. ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்ட வெளிப்  பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.

7. பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனைசெய்யும் கடைக்கு முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக் கூடாது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்போ, பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.

8. மருத்துவமனைக்கு அருகிலும், முதியோர் இல்லங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிருங்கள்.

9. விலங்குகளைத் துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

10. அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில், அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் பாதிக்கப்படக்கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்' என்று  கல்வித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார கால இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகளில் விழிப்பு உணர்வு செயல்முறைக் காட்சிகள் செய்தும், பொது இடங்களில்  மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பேரணிகள், தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்புகுறித்து, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்களைக் கொண்டு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது பள்ளிக்கல்வித் துறை.

பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம்! விபத்துகளைத் தடுப்போம்

Tuesday, October 16, 2018

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு விடிவு,1088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு விடிவு,1088 ஆசிரியர்கள் வழிகாட்டுனராக தேர்வு


Sunday, October 14, 2018

தெற்கு ரயில்வேயின் ‘ரயில்பார்ட்னர்’: ரயில் பயணிகளுக்கு உதவும் கூடிய ‘அரிய ஆப்ஸ்’ அறிமுகம்

ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்களின் வருகை, புறப்படும் நேரம், சிறப்பு ரயில்கள், பாதுகாப்பு எண்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய செயலியை(ஆப்ஸ்) தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் வர்த்தகத்துறை இந்தச் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணிகளும், ரயில்வே துறையும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்வசதியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனங்கள் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரயில்வே ஆப்ஸ்களால் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்று ரயில்வே துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ரயில்கள் வருகை, புறப்படும் நேரம் குறித்து தவறான தகவல், ரயில்கள் செல்லும் மார்க்கம் உள்ளிட்டவையும், கட்டணம் ஆகியவையும் குழப்பமாக இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து தெற்கு ரயில்வே சுயமாக இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆப்ஸ்களில் ரயில்கள் குறித்த வருகை, புறப்படும் நேரம் ஆகியவை குறித்த புள்ளிவிவரங்கள் தானாக அப்டேட் செய்யும் வசதி இல்லை. அவர்களால் ரயில்வே துறையுடன் நேரடியாக தொடர்பும் கொள்ள முடியாது. ஆனால், நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலியில் ரயில்நேரம் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
அனைத்து ஆன்ட்ராய் மொபைல் போன்களிலும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். பார்வை சவால் கொண்டவர்கள் கூட இந்த செயலியை பயன்படுத்தி, அதில்உள்ள “டாக்பேக்” ஸ்பீக்கர்களை பயன்படுத்தி ரயில் வருகை, புறப்படும் நேரத்தை அறிந்துகொள்ள முடியும்.
மேலும், பெண்கள், குழந்தைகள், முதியோருக்குப் பயன் அளிக்கும் வகையில், 20வகையான வசதிகள், உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. பயணத்தின் போது,மருத்துவ வசதி, ஆர்பிஎப் உதவி, ஜிஆர்பி உதவி, பெண்களுக்கான உதவி எண்கள், இ-கேட்டரிங் வசதி, குழந்தைகளுக்கான உதவி எண்கள், யுடிஎஸ் வசதி, லஞ்சஒழிப்புத்துறை, அனைத்து முக்கிய ரயில்நிலையங்களின் தொலைப்பேசி எண்கள் என பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன.
இந்த ஆன்ட்ராய்ட் ஆப்ஸில் வழக்கமான ரயில்கள் தவிர்த்து சிறப்பு ரயில்கள், பண்டிகை நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள், நேரம், வழித்தடம் ஆகியவை அளிக்கப்படும். இவை தானாக அப்டேட் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து,ஒருமுறை மட்டும் நமது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தச் செயலி ஆன்-லைன, மற்றும் ஆப்-லைனிலும் இயங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைனில் வைத்திருக்கும் போது ரயில்துறையின் முக்கிய அறிவிப்புகள், ரயில் வருகை நேரம், புறப்படும் நேரம் மாற்றம் ஆகியவை தெரிவிக்கப்படும். மேலும், எஸ்எம்எஸ் வசதி, ரயில் பிஎன்ஆர் பார்க்கும் வசதி, ரயில்நிலையத்தில் நாம் பயணிக்க வேண்டியரயில்எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிவது, நடைபாதையைக் கண்டறிதல் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.
இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொலைப்பேசி எண்களையும் அந்த ஆப்ஸில் இருந்தபடியே அழைத்துப் பேச முடியும். குறிப்பாகப் பாதுகாப்பு எண்கள், சுத்தம் செய்யும் பணி, கேட்டரிங் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம். முதல்முறையாக தெற்கு ரயில்வே ரயில்களுக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் சேர்த்து செயலியை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Courtesy:-
The Hindu Tamil Isai

Friday, October 12, 2018

பிஎச்டி பட்டம் பெறும் இருளர் பழங்குடி மாணவர்!

செங்கல் சூளையில் வேலை செய்யும் விளிம்பு நிலை இருளர் பழங்குடியினர் குடும்பத்தில் பிறந்த சக்திவேல், விழுப்புரம் மாவட்ட செங்கல் சூளைத் தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்து பிஎச்டி படித்து முடித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது அப்பா தங்கவேலும் அம்மா கல்விக்கரசியும் செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்தனர். பள்ளியில் சென்று படிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்களது குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதில் கல்விக்கரசி ஆர்வமாக இருந்தார். அதற்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் அளித்து வந்த விழிப்புணர்ச்சியும் ஒரு முக்கியக் காரணம்.
“சிறிய குடிசை வீட்டில்தான் எங்களது வாழ்க்கை. எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் மின்சார வசதி இல்லை. அதன் பிறகும் தற்போது வரை வீட்டில் ஒற்றை பல்புதான். கழிப்பறை வசதி இல்லை. எங்கள் ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆறாம் வகுப்பு படிக்க வளவனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். தினந்தோறும் ஐந்து, ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஏரியைக் கடந்து செல்ல வேண்டும். அதனால், எனது பெரியக்கா எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார். பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 32 மதிப்பெண்கள் எடுத்ததால் என்னால் அத்தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. அதைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு விழுப்புரத்தில் பயிற்சி அளிக்கும் சாந்தி நிலையம் என்ற இலவசப் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் எனது அம்மாவுடன் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்வேன். இந்தக் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு எப்படியாவது படித்துத் தீர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அத்துடன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தில் இருந்தவர்கள் என்னை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று என் அம்மாவிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தனர். அதனால், என் அம்மா என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்தார்” என்கிறார் சக்திவேல்.
பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற பிறகு,  அடுத்த ஆண்டில் வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பில் பொருளாதாரம், வரலாறு, புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தார். பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 821 மதிப்பெண்கள் பெற்றேன். அதையடுத்து, 2007இல் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பிஏ பொருளாதாரப் படிப்பில் சேர்ந்து 65 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் எம்ஏ பொருளாதாரப் படிப்பில் சேர்ந்து படித்து 68.23 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
எங்களைப் போன்றவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ படிப்புதான் ஒரே வழி.
பின்னர் அதே கல்லூரியில் எம்பில் படிப்பில் சேர்ந்து, புதுச்சேரி திருப்புவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகளில் உள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.ரவி மேற்பார்வையில் பிஎச்டி படிப்பில் சேர்ந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை குறித்த ஆய்வை மேற்கொண்டார்.
“செங்கல் சூளைத் தொழிலாளர்களுக்கு, உரிய வசதிகளுடன் தங்குமிடம் அளிக்கப்படுவதில்லை. கழிப்பறை வசதிகள் செய்துத ரப்படுவதில்லை. அந்தத் தொழில் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி எதுவும் செய்யப்படுவதில்லை. செங்கல் சூளை தொழிலாளர்களின் நலன்களைப் பாதுக்காப்பதில் தொழிலாளர் நலத் துறை போதிய அக்கறை செலுத்துவதில்லை. அத்துடன், செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளர்கள் முன்பணமாக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகிறார்கள்” என்பது போன்றவை தனது ஆய்வின் மூலம் தெரிய வந்ததாகவும்,  “இந்தக் கடன் பிரச்சினையிலிருந்து செங்கல் சூளைத் தொழிலாளர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறுகிறார் அவர்.

மாணவர் சக்திவேல்
“எங்களைப் போன்றவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ படிப்புதான் ஒரே வழி. எப்பாடுபட்டாவது படித்து விடலாம் என்று பார்த்தால், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. நான் எட்டாவது படிக்கும் போதிலிருந்தே எனக்கும் எனது அக்காவுக்கும் சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக ஆர்டிஓ (ரெவின்யூ டிவிஷனல் ஆபீசர்) அலுவலகத்துக்கும் தாலுகா அலுவலகத்துக்கும் எத்தனையோ முறை தொடர்ந்து போய் வந்திருக்கிறார். எப்படியோ ஒருவழியாக சாதிச் சான்றிதழ் பெற முடிந்ததால்தான் நான் தொடர்ந்து படிக்க முடிந்தது. சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் இருளர் இனத்தைச் சேர்ந்த பலர் படிப்பை இடையிலேயே விட்டு விடும் சூழ்நிலை உள்ளது. சாதிச்சான்றிதழ் இல்லாமல் படிக்க முடியாது. அத்துடன், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையையும் பெற முடியாது. சாதிச்சான்றிதழ் கிடைத்தாலேயே இருளர் இன மாணவர்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து விடுவார்கள்” என்கிறார் அவர்.
“பள்ளியிலிருந்து தமிழ் வழியில் படித்து வந்தேன். பிஏ படிக்கும் போது தமிழில் தேர்வு எழுத அனுமதி இருந்ததால் எனக்குப் பிரச்சினை இல்லை. எம்ஏ படிக்கும் போது ஆங்கிலத்தில் தேர்வு எழுத சிரமப்பட்டேன். பாடங்களை எழுதி எழுதிப் பார்த்துப் பயிற்சி செய்வேன். கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் அரியர்ஸ் எதுவும் கிடையாது. டியூஷன் எதுவும் சென்றதும் கிடையாது. அதற்கான வசதியும் இல்லை. பிஎச்டி படிக்கும் போது எனது ஆய்வுக்கு லேப்டாப் தேவைப்பட்டது. அதை வாங்கும் வசதி என்னிடம் இல்லை. லூசினா சிஸ்டர் தான் எனக்கு லேப் டாப் வாங்கிக் கொடுத்தார்” என்பதை நன்றியுடன் நினைவுகூறும் சக்திவேல், கோடையில் இருளர் இன மாணவர்களுக்காக நடத்தப்படும் கோடை காலத்தில் நடத்தப்படும் இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு அந்த மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்.  இவரது இன்னொரு அக்கா திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மூலம் நர்சிங் டிப்ளமோ படித்துள்ளார்.
சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் சக்திவேலுக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்துள்ளது. நெட், செட் தேர்வுகளை வெற்றிகரமாக எழுத வேண்டும் என்பதுடன் அரசுக் கல்லூரியில் நிரந்தமாக வேலையில் சேர வேண்டும் என்பதும் இந்த 29 வயது இருளர்  இன மாணவர் சக்திவேலின் அடுத்த இலக்கு. முயன்றால் முடியாது எதுவும் இல்லை.



Courtesy
Inmathi.com

Sunday, October 07, 2018

ஆவாரம்பூவை இப்படி டீ போட்டு குடித்தால் ஆயுள் இரட்டிப்பாகுமாம்..

நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கின்ற ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் இந்த ஆவாரம்பூவில் உண்டு. அத்தகைய அரிய மருத்துவ குணம் மிக்க மூலிகை பற்றி இங்கே வரிவாகப் பார்க்கலாம். ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும்.


இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருந்தாகப் பயன்படும்.
வளரும் இடம்
ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருநு்தாகப் பயன்படும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று ஒரு அற்புதமான பழமொழி கூட இந்த தாவரம் பற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆவாரையில் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது.
அடங்கியவை
ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளவனாயிடுகள், சபோனின், கிளைக்கோசைடு, ஸ்டீராய்டு போன்ற வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன.
மலச்சிக்கல்
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது. மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.

சருமத் தொற்று
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரிசெய்ய வேண்மென்றால், ஆவாரம்பூவை அரைத்து சருமத்தில் தடவலாம். அல்லது தேநீராக்கி உள் மருந்தாகவும் குடிக்கலாம்.
சிறுநீர் தொற்று
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சல்
அதிகப்படியான மருத்துவு குணங்கள் கொண்ட ஆவாரம்பூ தேநீரை தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.

நீரிழிவு நோய்
பெரும்பாலானோர் உணவுக் கட்டுப்பாடு இன்றி, இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும். ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும். இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
மேனி பளபளப்பு
ஆரோக்கியம் மட்டுமல்ல. அழகு விஷயத்திலும் மிகச்சிறந்த பலன்களைத் தரும் ஆவாரம்பூ. ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் தங்கமாக மின்ன ஆரம்பிக்கும்.
வயிற்றுப்புண்
காய வைத்து பொடி செய்த ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அத்தனையும் தீரும.




Thursday, October 04, 2018

Tuesday, October 02, 2018

2018 மருத்துவத்துக்கான நோபல்: புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாதையைத் திறந்த ஜேம்ஸ் பி.அலிசன், டசூகு ஹோஞ்சோ ஆகியோர் வென்றனர்

புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன், மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்துள்ளது.
டசுகூ ஹோஞ்சோ ஜப்பான் கியோட்டோவில் 1942-ம் ஆண்டில் பிறந்தவர். 1984 முதல் இவர் கியோட்டோ பல்கலையில் பணியாற்றி வருகிறார்.
புற்றுநோயினால் ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் மக்கல் பலியாகி வருகின்றனர். புற்றுநோய் மனித உயிர் வாழ்க்கைக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இதனையடுத்து நம் உடலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோக்கட்டி செல்களை அது தீவிரமாகத் தாக்கும் கேன்சர் சிகிச்சையில் புதிய பாதைத் திறப்பை இவர்கள் இருவரும் மேற்கொண்டனர்.
நம் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அமைப்பில் புரோட்டீன் ஒன்று தடையாகச் செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்தார். இந்தத் தடையை உடைத்து விட்டால் நம் நோய் எதிர்ப்புச் சக்தி செல்கள் புற்றுநோய்க்கட்டிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதைக் கண்டறிந்தார். இதனையடுத்து புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைக்கான கருத்தாக்கத்தை அவர் வளர்த்தெடுத்தார்.
இதற்கு சமமாக ஜப்பானிய மருத்துவ விஞ்ஞானி டசூகு ஹோஞ்சோவும் இதே உடல் எதிர்ப்புச் சக்தியில் புரோட்டீனின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதுவும் தடை ஏற்படுத்துவதாக அவர் முடிவுக்கு வந்தார். ஆனால் இது வேறு ஒருமுறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை செயலாற்ற விடாமல் செய்கிறது என்பதைக் கண்டறிந்தார்.
இதனையடுத்து இருவருமே நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பில் உள்ள இந்தத் தடைக்கு தடைசிகிச்சை செய்தால் புற்றுநோயை விரட்ட முடியும் என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்று கருதப்படுகிறது.
Courtesy:
The Hindu Tamil Isai