Thursday, February 18, 2016

பேரார்வத்தால் திணறி முடங்கியது 'ஃபிரீடம்251' முன்பதிவு

ரூ.251 விலையில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க பொதுமக்கள் பேரார்வம் காட்டியதால் வலைதளம் திணறி 'ஃபிரீடம்251' ஆன்லைன் முன்பதிவு சேவையே முடங்கியது.

இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன் நேற்று (புதன்கிழமை) அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் ரூ.251-க்கு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இந்த நிறுவன திட்டம் ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப விற்பனைக்கான இணையதளம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு துவக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே திணறி முடங்கியது.

இது தொடர்பாக அந்த இணைய பக்கத்திலேயே ஒரு விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், "வாடிக்கையாளர்களே தங்களது பேராதரவு எங்களுக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் அளித்த மிகுதியான ஆதரவால் ஒரு விநாடிக்கு 6 லட்சம் ஹிட் எங்கள் இணையதளத்துக்கு கிடைத்துள்ளது. இதனால், எங்கள் சர்வர்கள் முடங்கியுள்ளது.

எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் சர்வர் பிரச்சினையை சரிசெய்துவிடுவோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 24 மணி நேரத்துக்குப் பின்னர் தாங்கள் http://freedom251.com/cart இணையம் வாயிலாக மொபைலுக்கான பதிவை தொடங்கலாம் என்பதை கனிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருட வாரண்டியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 650 சேவை மையங்கள் உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Courtesy : The Tamil Hindu

0 comments:

Post a Comment